அய்! சிவசங்கரா!!.. அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை செல்லமாக அழைத்த பள்ளி மாணவி!!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 8:32 PM IST

thumbnail

பெரம்பலூர்: குன்னம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டப் பணிகளைத் துவங்கி வைத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் ஆய்வை மேற்கொண்டிருந்தார். ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட குரும்பாபாளையம் பகுதியில் சாலைப் பணியைத் துவங்கி வைக்கச் சென்றனர். அப்போது சாலையின் ஓரம் இருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வாகனத்தைச் செலுத்தி அங்கு திடீர் ஆய்வை மேற்கொண்டார். 

வழக்கமான பணிகளிலிருந்த ஆசிரியர்களும், மாணவர்களும் அமைச்சர் வருகையைக் கண்டு ஆச்சரியமடைந்து நின்றனர். நேராகப் பள்ளியில் சமையலறைக்குச் சென்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அங்குத் தயாராகிக் கொண்டிருந்த மதிய உணவை சாப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் வகுப்பறைக்குத் துவக்கப்பள்ளி என்பதால் அங்கிருக்கும் மாணவர்களிடம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார் தெரியுமா? எனக் கேள்வி எழுப்பினார்

மு.க.ஸ்டாலின் என மாணவர்கள் தரப்பிலிருந்து பதில் கூறினர். அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு மாணவி, அய் ! சிவசங்கரா? எனக் குரலெழுப்புகிறார். யாரது, சிவசங்கரானு கேட்டது எனக் கூட்டத்தில் அம்மாணவியை அமைச்சர் தேடினார். அந்த மாணவி அகத்தியா எனக் கண்டுபிடித்த அமைச்சர் உடனே, அகத்தியாவிடம் என்னை உனக்குத் தெரியுமா? என்றார்.

அகத்தியாவோ சிறிதும் தயக்கமின்றி "ம்ம், தெரியுமே" ஊருல பேசிப்பாங்க என மகிழ்ச்சியோடு கூறினார். மாணவி அகத்தியாவின் பதிலைக் கேட்டு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரும் மகிழ்ந்து அவரை நன்றாகப் படி எனப் பாராட்டினார். அருகிலேயே மற்றொரு மாணவர் ஏற்கனவே உங்களை பாத்துருக்கோம் என்றார். எங்கே பார்த்துள்ளீர்கள்? என அமைச்சர் கேட்டார். 

அதற்கு நீங்க தான் போலீசோடயே எப்பவும் வருவீர்களே என மற்றொரு மாணவர் கூறினார். அவரது பதிலால் அமைச்சர் உட்பட அனைவரும் சிரித்தனர். பரவால்லையே இந்த வயதிலேயே அமைச்சரை எல்லாம் தெரிந்து வச்சிருக்கீங்களே, எல்லோரும் நல்லா படிக்கனும், அனைவருக்கும் நன்றி, வணக்கம் என மாணவர்களிடமிருந்து அமைச்சர் விடைபெற்றார்

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.