அக்னி குஞ்சொன்று கண்டேன்..! அழுது கொண்டே கவிதை கூறிய சிறுவனின் வைரல் வீடியோ!
நாகப்பட்டினம்: சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பள்ளிகளில் பல நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். குறிப்பாக சிறு குழந்தைகள் பங்கேற்கும் மாறுவேட போட்டி, நடன போட்டி, பேச்சு போட்டி என நடக்கும் போட்டிகள் காண்பதற்கு மிகவும் அழகானதாக இருக்கும்.
அதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டை என்ற பகுதியில் சிந்தனை சிற்பி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி ஒன்று நடைபெற்று வருகிறது. இப்பள்ளியில் நாட்டின் 77வது சுதந்திர தின நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடந்தது. அப்போது மாணவர்கள் பலரும் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்திக் காட்டினர்.
இதனிடையே பாரதியார் வேடம் அணியவிருந்த மாணவன், தன் ஆசிரியரிடம் பாரதியார் எழுதிய "அக்னி குஞ்சொன்று கண்டேன்" கவிதையை அழுது கொண்டே கூறிய சிறுவன் ஜெய் கிருஷ் என்பவரின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜெய் கிருஷ், தன் மழலை குரல் மாறாமல் அழுது கொண்டே, பாரதியாரை போல மீசை முறுக்கியவாறு, பாரதியின் வீரமிகு கவிதையை கூறும் காட்சி காண்போரை கவரும் வகையில் அமைந்து இருந்தது. குறிப்பாக மானவன் ஜெய் கிருஷ் தன் சொல்ல வேண்டிய கவிதைகளை அனைத்தும் தவறாமல் சொன்னதும் வீடியோவில் தெரியவந்தது.