போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம்; நீலகிரியில் பேருந்துகள் இயக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடு..
Published : Jan 9, 2024, 4:27 PM IST
நீலகிரி: தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் சில இன்று (ஜன.09) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ஊட்டி மண்டலம் சார்பாகப் பேருந்துகள் இயக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், LPF தொழிற்சங்கம் மற்றும் இதர தொழிற்சங்கத்தைச் சார்ந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை வைத்து முழுமையாகப் பேருந்துகளை இயக்கவும் வேலை நிறுத்தம் தொடரும் பட்சத்தில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து பயிற்சி பெற்ற வெளி ஓட்டுநர்களின் பட்டியல் பெறப்பெற்று அனைத்து பேருந்துகளையும் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, தேவைப்படும் பட்சத்தில் ஓய்வு பெற்ற ராணுவ ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கவும் மற்றும் காவல்துறை சார்பாக உரியப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கோவை கோட்டம் உதகை மண்டலம் சார்பாக பொது மக்களுக்கு இடையூறு இன்றி அனைத்து பேருந்துகளையும் முழுமையாக இயக்க அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று நீலகிரி மாவட்ட போக்குவரத்துத் துறை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சூழ்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று (ஜன.09) வழக்கம்போல பேருந்துகள் இயக்கப்பட்டது காலை வேளையில் மட்டும் பேருந்துகள் தாமதமானதால் பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல சிரமம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.