அந்த மனசுதாங்க கடவுள்.. உயிருக்கு போராடிய நாய்க்குட்டியை காப்பாற்ற உத்தரவிட்ட கலெக்டர்!
Published : Dec 21, 2023, 2:16 PM IST
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் க.கற்பகம், இன்று (டிச.21) பார்வையிட்டு ஆய்வு செய்ய சென்றிருந்து உள்ளார். அப்போது, மதரசா சாலைப் பகுதியில் செடிகளுக்கு இடையே நாய்க்குட்டி ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடப்பதை பார்த்துள்ளார். பின் உடனடியாக நாய்க்குட்டியை கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, நகராட்சிப் பணியாளர்கள் சற்றும் தாமதிக்காமல் அந்த நாய்க்குட்டியை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு பத்திரமாக எடுத்துச் சென்று, அங்குள்ள மருத்துவரிடம் ஒப்படைத்து உள்ளனர். இதனை அடுத்து, மருத்துவர்களின் துரித நடவடிக்கையால் நாய்க்குட்டிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு, நாய்க்குட்டி உயிர் பிழைத்து உள்ளது.
இவ்வாறு உயிருக்குப் போராடிய நாய்க்குட்டியை உடனடியாக மீட்டு, மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு இருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகிறது.