Aadi Amavasai: முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தாமிரபரணியில் திரண்ட மக்கள்!
திருநெல்வேலி: ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 16) தாமிரபரணி ஆற்றில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்கு தை அமாவாசை, மஹாலயா அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை சிறந்த நாட்களாக கருதப்படுகிறது.
அதிலும் ஆடி அமாவாசை நாளில் புண்ணிய ஸ்தலங்களில் உள்ள கடல், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் நீராடி விட்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதும், நேர்த்திக் கடன்களை செலுத்துவதும் வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், திருச்சி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஏராளமானோர் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.
மேலும் பலர் குடும்பத்துடன் தங்கள் குல தெய்வ கோயில்களுக்கு சென்று பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள். இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட். 16) ஆடி அமாவாசையையொட்டி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள பாபநாசம், தாமிரபரணி ஆற்றில் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தென்மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடி, எள், அரிசி மாவு பிண்டம் உள்ளிட்டவற்றை வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
இதனால் பாபநாசம் கோயில் படித்துறைகள், கல் மண்டபங்கள் உட்பட கோயிலை சுற்றி ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து இருந்தனர். இதனால் அம்பை காவல் சரகத்திற்குட்பட்ட சுமார் 100 க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தென்காசி பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு துறையினர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு பாபநாசர் கோயில் அதிகாலையிலேயே திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. பின்னர் நதியில் நீராடிய பக்தர்கள் சிவன் கோயிலுக்கு சென்று வழிபட்டனர். இதேபோல் அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள ஆம்பூர் கடனாநதி, கடையம் ராமநதி, அம்பை, கல்லிடைக்குறிச்சி தாமிரபரணி கரைகளிலும் ஏராளமானவர்கள் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்தனர்.