நாகை கடலில் மிதந்து வந்த புத்தர் தெப்பம்!
Published : Jan 2, 2024, 5:30 PM IST
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வெள்ளப்பள்ளம் கடற்கரை பகுதியில் இருந்து கிழக்கே சுமார் ஒரு நாட்டிகல் மைல் தூரத்தில் தெப்பம் ஒன்று மிதந்து வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த வெள்ளப்பள்ளம் மீனவர்கள், கடலில் மிதந்து கொண்டிருந்த தெப்பத்தை தங்களது படகில் கட்டி கடற்கரைக்கு இழுத்து வந்துள்ளனர்.
10 அடி உயரம், 6 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட தெப்பம் கோபுர வடிவில் அலங்கரிக்கப்பட்டு சிறிய தேர் போல் காட்சியளித்துள்ளது. தெப்பத்தின் உச்சியில் பௌத்தர்களின் கொடி கட்டப்பட்டுள்ளது. தெப்பத்தின் உள்ளே புத்தர் சிலை ஒன்றும், கிண்ணம் போன்ற பாத்திரமும் அதில் மெழுகுவர்த்தி, சாம்பிராணி போன்ற பொருட்கள் இருத்துள்ளது.
இது குறித்து விசாரணை செய்தபோது, பர்மாவில் புத்த குருமார்கள் இறந்துவிட்டால் அவர்களது அஸ்தியை இவ்வாறு தெப்பம் செய்து கடலில் விடுவார்கள் என கூறப்படுகிறது. பர்மா கடற்கரையில் விடப்பட்ட இந்த தெப்பம், கடலில் வீசிய காற்றால் தமிழக கடற்பகுதிக்கு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கரை ஒதுங்கிய அழகிய தெப்பத்தை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பார்த்து வருகின்றனர்.