அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத பிரதோஷம் சிறப்பு அபிஷேகம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 7:05 AM IST

thumbnail

திருவண்ணாமலை: பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரிய நந்திக்கு மார்கழி மாத பிரதோஷம் நேற்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. அமாவாசை மற்றும் பௌர்ணமி வரும் இரண்டு நாட்களுக்கும் முன்பு மகா நந்திக்கு பிரதோஷம் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், சிறப்பு பெற்ற மார்கழி மாத பிரதோஷ தினமான நேற்று, அண்ணாமலையார் கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப் பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண மலர்களால் மாலை அணிவித்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது. பிரதோஷ தினத்தின் பொழுது, நந்தி பகவானை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.

நேற்று நடைபெற்ற மார்கழி மாத பிரதோஷத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.