கார்த்திகை தீபம்: இலட்ச தீபத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 8:30 AM IST

thumbnail

மதுரை: திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நேற்று (நவ.26) இலட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, பொற்றாமரைக் குளம் உள்பட கோயில் வளாகம் முழுவதும் தீப ஒளியில் ஜொலித்தது.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை உற்சவ விழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி  நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் ஸ்ரீ மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் கோயில் வளாகத்தில் உள்ள ஆடி வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளித்தனர்.

இந்நிலையில் நேற்று திருக்கார்த்திகையை முன்னிட்டு, கோயில் பொற்றாமரைக்குளம், அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, உள்பிரகாரங்கள் உள்பட கோயில் வளாகம் முழுவதும் அகல்விளக்குகள் மூலம் லட்ச தீபங்கள் ஏற்றப்பட்டது. இதில், கோயில் இணை ஆணையர் கிருஷ்ணன், கோயில் பணியாளர்கள், பக்த சபையினர் மற்றும் பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்று லட்ச தீபங்களை ஏற்றினர். இதனால் கோயில் வளாகம் முழுவதும் விளக்கொளியில் ஜொலித்தது.

பின்னர், மீனாட்சி-சுந்தரேசுவர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர். தொடர்ந்து உபய தங்கரத உலா மற்றும் உபய திருக்கல்யாணம் ஆகிய விசேங்கள் நடைபெறாது என திருக்கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்த்திகையை முன்னிட்டு கோயிலில் லட்சதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கோயில் வளாகம் முழுவதும் அகல் விளக்குகளால் ஜொலித்தது. 

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.