Cauvery Ratha Yatra: காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை.. காவிரி அன்னைக்கு கும்பகோணத்தில் வரவேற்பு..!
Published : Nov 11, 2023, 11:00 AM IST
தஞ்சாவூர்: புனிதமாக போற்றப்படும் காவிரி நதியினை தூய்மையாகப் பராமரிக்கவும், நதியில் குப்பைகளைக் கொட்டுவதையும், சாயக் கழிவுநீர், அசுத்த நீர் கலக்காமல் பாதுகாக்கவும் வேண்டி, அகில பாரத சந்நியாசிகள் சங்கமும், காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளையும் இணைந்து தொடர்ந்து 13வது ஆண்டாக கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி கர்நாடக மாநிலம் தலைக் காவிரியான குடகில் இருந்து காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரை விநாயகர் மற்றும் காவிரி அன்னை விக்ரகங்களுடன் தொடங்கியது.
இந்த ரத யாத்திரை ஒக்கேனக்கல், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி வழியாக 23வது நாளான நேற்று (நவ.10) கும்பகோணம் வந்தடைந்தது. இந்த விழிப்புணர்வு ரத யாத்திரை 1,923 கிலோ மீட்டர் கடந்து, நிறைவாக வரும் 13ஆம் தேதி திங்கட்கிழமை காவிரி கடலில் சங்கமிக்கும் மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகாரில் நிறைவடைகிறது.
இந்த நிலையில் காவிரி விழிப்புணர்வு ரதத்திற்கு, கும்பகோணத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இந்த ரதத்தில் உலா வந்த விநாயகருக்கும், காவிரி அன்னைக்கும் சிறப்பு அபிஷேகங்கள் செய்து பூஜைகள் செய்யப்பட்டு கோபுர மகா ஆரத்தி காண்பித்து வழிபாடு நடந்தது. இதில் துறவியர்கள், பெண்கள் உட்பட பலர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.