விளை நிலங்களில் காட்டுப் பன்றிகள் அட்டகாசம்.. வேலூர் விவசாயிகள் வேதனை!
Published : Oct 15, 2023, 6:36 PM IST
வேலூர்: குடியாத்தம் அடுத்த நெட்டேரி கிராமத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட விவசாயிகள் 50 ஏக்கர் பரப்பளவில் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் 25 ஏக்கருக்கும் அதிகமான வேர்க்கடலை பயிர்களை, இரவு நேரங்களில் காட்டுப்பன்றி கூட்டம் முழுமையாக சேதப்படுத்தியது. இதனால் செய்வறியாமல் வேர்கடலை விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "வேர்க்கடலை பயிரிடுவதற்கு ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். தற்போது அறுவடை காலத்தில் ஒவ்வொரு செடிகளிலும் இரண்டு அல்லது மூன்று வேர்க்கடலை மட்டுமே உள்ளது. பல செடிகளில் ஒரு வேர்க்கடலை கூட விட்டு வைக்காமல் காட்டுப் பன்றிகள் சாப்பிட்டுள்ளது.
பல விவசாயிகள் கடன் வாங்கி வேர்க்கடலை பயிரிட்டுள்ள நிலையில், காட்டுப்பன்றிகளால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுது. இதனால் கடனை திரும்ப செலுத்த முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். தற்போது இந்த பகுதியில் உள்ள வேர்க்கடலை பயிரிட்ட விவசாயிகள், காட்டுப்பன்றிகளுக்கு பயந்து அடுத்தடுத்து வேர்க்கடலை பயிர்களை விளைச்சலுக்கு முன்னதாகவே அறுவடை செய்து வருவதாக தெரிவித்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் காட்டுப்பன்றிகளால் ஏற்பட்டுள்ள இழப்பீடை சரி செய்ய உதவி செய்ய வேண்டும்" எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.