கண்களைக் கவரும் புகைப்படங்கள்: ஊட்டி கண்காட்சியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்!

By

Published : May 7, 2023, 5:20 PM IST

thumbnail

உதகை: உதகமண்டலம் உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு அதற்கான கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த கொண்டாட்டம், இக்கோடை விழாவுடன் நிறைவடைகிறது. இதன் ஒருபகுதியாக  உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், "உதகை 200 புகைப்படக் கண்காட்சி" நடைபெற்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கண்காட்சியை திமுக எம்.பி. ஆ.ராசா, சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.  நீலகிரின் அழகை எடுத்துரைக்கும் சிறந்த புகைப்படங்கள் அனைத்தும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 

நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வியல் முறை, சுற்றுலாத்தலங்கள், வனவிலங்குகள், பறவைகள் என அனைத்தும் ஒரே இடத்தில் புகைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் துவங்கிய கோடை விழாவைத் தொடர்ந்து, தற்போது தொடங்கப்பட்டுள்ள இப்புகைப்படக் கண்காட்சி சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.  

இதுகுறித்து திமுக எம்.பி. ஆ.ராசா கூறுகையில், "நீலகிரி மாவட்டத்தில் ஒட்டுமொத்த அழகையும் விவரிக்கும் வகையில் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் என அனைத்து தரப்பினரும் கண்காட்சியை கண்டுகளித்து வருகின்றனர்" என்றார்.  

சுற்றுலாப்பயணிகள் கூறும்போது, "புகைப்படங்கள் அனைத்தும் சிறப்பாக உள்ளன. புகைப்படத்தில் பார்க்கும் இடங்களை நேரடியாக சென்று காண ஆர்வம் அதிகரித்துள்ளது" என்றனர்.

கண்காட்சியில் குழந்தைகளை மகிழ்விக்க கார்ட்டூன் சித்திரங்கள் செல்பி ஸ்பாட் ஆக வைக்கப்பட்டுள்ளன. இன்று (மே 7) துவங்கியுள்ள இந்த புகைப்பட கண்காட்சி இம்மாதம் இறுதிவரை நடைபெற உள்ளது. 

இதையும் படிங்க: "ஏவிஎம் ஹெரிட்டேஜ்" அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.