சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரின் செல்போன் திருட்டு.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
Published : Dec 13, 2023, 12:36 PM IST
ஈரோடு: குமார் என்பவர் அகில்மேடு வீதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர் இன்று வழக்கம்போல தனது டீக்கடையில் பணியாற்றி கொண்டு இருந்துள்ளார். அப்போது குமாரின் டீக்கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், பொருள் வாங்குவது போல் கல்லா பெட்டியின் அருகில் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது யாரும் கவனிக்காத நிலையில், அந்த இளைஞர் கல்லா பெட்டி மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குமாரின் செல்போனை லாவகமாக திருடிச் சென்றுள்ளார். அவர் செல்போனை திருடிச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து கேமராவில் பதிவாகியுள்ள இளைஞரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், டீக்கடை நடத்தி வரும் குமார் திரைப்பட நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகர் என்பதும், ஆண்டுதோறும் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள் மற்றும் இறந்த நாளன்று தவறாமல் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.