CCTV Video: மதுபோதையில் பெண் காவலரை ஆபாசமாகப் பேசி தாக்கிய 4 பேர் கைது!
வேலூர்: குடியாத்தம் அடுத்த நரியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கீதா என்பவர், குடியாத்தம் மதுவிலக்கு காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது அழிஞ்சுகுப்பம் கிராமத்தில் உள்ள ஒரு துணிக்கடையில் துணி வாங்கிக் கொண்டிருந்தார்.
மதுபோதையில் துணிக்கடைக்கு வந்த மேல்கொத்தகுப்பம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன், சத்தியமூர்த்தி, பிரபாகரன், தினகரன், ஆகிய நான்கு பேரும் மகளிர் காவலரான கீதாவை, ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் காவலர் கீதா அவர்கள், ஆபாசமாக பேசுவதை செல்போனில் வீடியோ எடுக்க முயன்று உள்ளார்.
அப்போது அந்த நான்கு பேரும் காவலர் கீதா கையில் இருந்த செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது கடைக்காரர் மது போதையில் இருந்த நான்கு பேரிடம் கை எடுத்து கும்பிட்டு பிரச்சனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுள்ளார்.
அப்போதும் அந்த நான்கு பேரும் காவலர் கீதாவை ஆபாசமாகப் பேசி தாக்கவும் முயன்றுள்ளனர். பின்னர் காவலர் கீதா, மேல்பட்டி காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவத்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரை கண்டு அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
மேல்பட்டி காவல் நிலையத்தில் மகளிர் காவலர் கீதா கொடுத்தப் புகாரின் பேரில் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 4 பேரை மேல்பட்டி போலீசார் கைது செய்தனர். துணிக்கடையில் மகளிர் காவலரிடம் மது போதையில் நான்கு பேர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.