அண்ணாமலையார் கோயிலில் மார்கழி மாத உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 15 லட்சம் வசூல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 7:18 AM IST

thumbnail

திருவண்ணாமலை: புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயில் மார்கழி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 15 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை ஸ்ரீ அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இவ்வாறு வருகிற பக்தர்கள் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை கோயில் பகுதியில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டிருக்கும் உண்டியல்களில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

அண்ணாமலையார் கோயிலில் பௌர்ணமி கிரிவலம், சித்ரா பௌர்ணமி மற்றும் 'திருக்கார்த்திகை தீபத் திருவிழா' உலக பிரசித்தி பெற்றது. இந்நிலையில், மார்கழி மாத பௌர்ணமி கிரிவலம் முடிந்த நிலையில், நேற்று (ஜன.5) அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உண்டியல் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணிகள் நடைபெற்றது.

அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து உண்டியல்கள் எண்ணும் பணி நடைபெறும். iதில், கோயில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வர்கள் என உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் ரொக்கமாக ரூ. 3 கோடியே 15 லட்சத்து 30 ஆயிரம் கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், தங்கம் 210 கிராம், வெள்ளி 1 கிலோ 695 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்தி உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.