ETV Bharat / sukhibhava

எப்போ பொங்கலிடணும்? பூஜை எப்படி செய்யணும்? முழு விவரத்தையும் தெரிஞ்சுக்கோங்க!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 13, 2024, 6:29 PM IST

பொங்கல் வைக்க நல்ல நேரம்
what is the best time to keep pongal

Best time for pongal pooja: தைப்பொங்கலை வரவேற்க அனைவரும் தயாராகி வரும் நேரத்தில் இந்தாண்டு பொங்கல் வைப்பதற்கான நல்ல நேரம், வழிபாட்டு முறைகள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாகக் காணலாம்.

சென்னை: தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, தை பிறந்தவுடன் பொங்கல் பண்டிகையை வரவேற்கக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயத்தமாகிவிடுவார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாகத் தென் பகுதிகளில் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை தைத் திருநாள் என்றும் மற்ற இடங்களில் மகர சங்கராந்தி என்றும் அழைக்கப்படுகிறது. தை மாதத்தில் சூரியன் வடக்கு நோக்கி தனது பயணத்தைத் துவக்குவதால், இது விதை விதைப்பதற்கான காலமாகவும், ஏற்கனவே பயிரிட்ட நெற்களை அறுவடை செய்வதற்கு உகந்த காலமாகக் கருதப்படுகிறது.

அதனால் பொங்கல் தினம் அறுவடை தினமாகவும், உழவர்களுடைய பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் உன்னத நாளாகவும், சூரிய பகவானுக்கு நன்றியைத் தெரிவிக்கும் தினமாகவும் பாவிக்கப்படுகிறது. இந்த ஆண்டு கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை எந்த நேரத்தில் பிறக்கிறது, தை மாதம் பிறக்கும் நேரத்தில் தான் பொங்கல் வைக்க வேண்டுமா போன்ற உங்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் தேச மங்கையர்க்கரசி.

பொங்கலை இரண்டு விதமாக, அதாவது ஒன்று சூரியப் பொங்கல் மற்றொன்று நல்ல நேரம் பார்த்துப் பொங்கல் வைப்பது என பிரிக்கப்படுகிறது. தைத் திருநாளன்று அதிகாலை சூரியன் உதயமாவதுக்கு முன்பு பொங்கல் செய்து படைப்பது சூரியப் பொங்கல் என கூறப்படுகிறது. மற்றொன்று குடும்பத்தில் அனைவரும் ஒன்றுகூடி நல்ல நேரம் பார்த்துப் பொங்கல் வைப்பதாகும் என கூறுகிறார் மங்கையர்க்கரசி.

தை பிறக்கும் நேரம்: 15ம் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 5.45 மணி

சூரிய பொங்கல் வைக்கும் நேரம்: 15ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை

பொங்கல் வைக்க நல்ல நேரம்: 15ம் தேதி காலை 6.45 மணி முதல் 7.30 மணி வரை

காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

மதியம் 12 மணி முதல் மதியம் 2 மணி வரை

தவிர்க்க வேண்டிய நேரங்கள்: ராகுகால நேரமான காலை 7.30 மணி முதல் 9 மணி வரை மற்றும் எமகண்ட நேரமான காலை 10.30 மணி முதல் 12 மணி வரை எனக் கூறுகிறார் ஆன்மிக மங்கையர்க்கரசி.

பொங்கல் பூஜை செய்வது எப்படி: பொங்கல் தினத்தன்று நல்ல நேரம் பார்த்து, வீட்டின் முற்றம் அல்லது வீட்டின் பூஜை அறையின் முன் குத்துவிளக்கேற்றி, ஒரு வாழை இலையைப் போட வேண்டும். இலையில் இடது ஓரத்தில் நாழி நிறையப் பச்சை நெல் வைத்து, இலையில் பச்சரிசி பரப்பி, அதன் மேல் கருணைக்கிழங்கு, சிறுகிழங்கு, வள்ளிக்கிழங்கு,அவரைக்காய்,கத்தரிக்காய், சீனி அவரை, பூசணித் துண்டு, சேனைக்கிழங்கு போன்ற காய்கறிகளைப் படையலிட வேண்டும்.

காப்பரிசி (வெல்லம், பச்சரிசி கலவை), வெற்றிலை, பாக்கு, பழம்,மஞ்சள்கிழங்கு வைத்து வழிபட வேண்டும். முக்கியமாக, ஒற்றைக் கரும்பு வைப்பதைத் தவிர்த்து இரண்டு கரும்புகளை வைத்து வழிபட வேண்டும். இந்த பொங்கலை இனிதே கொண்டாட அனைவருக்கும் இனிய தை திருநாள் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இதையும் படிங்க: இந்தியாவில் அதிகரிக்கும் மார்பக புற்றுநோய் பாதிப்பு.. ஆய்வில் வெளிவந்த உயிர்வாழ்வு விகிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.