ETV Bharat / state

விருதுநகர் பாலியல் வழக்கில் புதிய திருப்பம் - இளம்பெண் மீது கைதான சிறுவன் பரபரப்பு புகார்!

author img

By

Published : Apr 18, 2022, 8:14 PM IST

விருதுநகர் பாலியல் வழக்கில் புது திருப்பம்
விருதுநகர் பாலியல் வழக்கில் புது திருப்பம்

விருதுநகர் இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் கைதான சிறுவன், பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் 22 வயது இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என மொத்தமாக 8 பேர் கடந்த மாதம் 21ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.

தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட நான்கு பேர் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மதுரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருந்த சிறுவர்கள் நான்கு பேரும் கடந்த வாரம் ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ள சிறுவன் ஒருவன், தன்னை பாலியலுக்கு உட்படுத்தியதாகக் கூறி புகார் அளித்த இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் எனக் கோரி முதலமைச்சர், போக்சோ நீதிமன்ற நீதிபதி, மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், உயர் நீதிமன்ற பதிவாளர், உள்துறைச் செயலர், ஐ.ஜி, டிஐஜி, குழந்தைகள் நலப்பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சட்ட உதவி மையத் தலைவர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார்.

அந்த மனுவில் சிறுவன் தெரிவித்துள்ளபடி, “ஹரிஹரன் மூலம் இளம்பெண் எனக்கு பழக்கமானார். சிறுவர்களான எங்களை அந்த இளம்பெண் தனித்தனியாக வெவ்வேறு நாள்களில் அழைத்து கட்டாயப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் செய்தார். வெளியில் கூறினால் வாழ்க்கைக்கும், படிப்புக்கும் பாதிப்பு ஏற்படும் எனக்கூறி அவர் எங்களை மிரட்டினார். ஆனால், காவல் துறையினர் எங்களை கைது செய்தபோது விவரத்தைக் கூறினேன். இளம்பெண்ணின் அலைபேசியைப் பார்த்தால் உண்மை தெரியும் என்றும் கூறினேன்.

ஆனால், காவல் துறையினர் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு சென்ற பின்னரும் சிபிசிஐடி காவல் துறையினரிடமும் இதை தெரிவித்தேன். ஆனால், இந்த விவரத்தை வெளியில் தெரிவிக்கக்கூடாது என என்னை மிரட்டினார்கள். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி சிறுவர் சிறையில் இருந்தபோது இலவச சட்ட உதவி மையத்தின் மூலம் வெளியே வந்தேன்.

நான் 18 நாள்கள் சிறையில் இருந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி, மன வேதனையுடன் வாழ வேண்டிய நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளேன். எனவே, என்னை கட்டாயப்படுத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இளம்பெண் மீது வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இளம்பெண் கூட்டுப்பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் மீது அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்ய மனு அளித்திருப்பது காவல் துறை அலுவலர்கள், பொதுமக்கள் மத்தியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஓட ஓட விரட்டி மூவர் கொலை: 4 பேர் கைது; இருவர் தலைமறைவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.