ETV Bharat / crime

ஓட ஓட விரட்டி மூவர் கொலை: 4 பேர் கைது; இருவர் தலைமறைவு

author img

By

Published : Apr 18, 2022, 11:47 AM IST

நெல்லை அருகே நிலப்பிரச்சினை தொடர்பாக அண்ணன், தம்பி, தங்கை ஆகிய 3 பேர் வெட்டிக்கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேரை காவலர்கள் கைதுசெய்துள்ள நிலையில், 2 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

நெல்லை மூவர் கொலை விவகாரம்
நெல்லை மூவர் கொலை விவகாரம்

திருநெல்வேலி: தாழையூத்து அருகேயுள்ள நாஞ்சான் குளம் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜ். இவருக்கு இவரது சித்தப்பா மகனான அதே பகுதியை சேர்ந்த அழகர்சாமி என்பவருக்கும் நிலத்தகராறு இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜேசுராஜ் ஒரு நிலத்தில் குடிநீர் தேவைக்காக நேற்று (ஏப். 17) போர் போட்டுக்கொண்டிருந்தார்.

அரிவாள் வெட்டு: அப்போது, ஜேசுராஜ் உடன் அவரது தம்பி மரியராஜ், சகோதரி வசந்தா, வசந்தாவின் கணவர் மற்றொரு ஜேசுராஜ், மரிய ராஜி மகன் அமோஸ் ஆகிய ஐந்து பேர் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த அழகர்சாமி, அவரது மனைவி பேச்சியம்மாள், மருமகன் செந்தில்குமார், மகன்கள் மணிகண்டன், சுந்தரபாண்டி, அவரது உறவினர்கள் ஜேசுராஜ் உள்பட ஐந்து பேரையும் ஓட ஓட விரட்டி சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

மூவர் உயிரிழப்பு: இதைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், 5 பேர் படுகாயமைடந்ததை அடுத்து, அவர்கள் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஜேசுராஜ், ஜேசுராஜின் தம்பி மரியாஜ், சகோதரி வசந்தா ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர். படுகாயமடைந்த அமோஸ் மற்றும் வசந்தாவின் கணவர் ஜேசுராஜ் இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், முதலில் அழகர்சாமி தரப்பில் அழகர்சாமி, பேச்சியம்மாள், சுந்தரபாண்டி ஆகிய 3 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த 3 பேரின் உடல் உடற்கூராய்வு பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தனிப்படை தேடுதல் வேட்டை: இதேபோன்று, சம்பவ இடத்தில் தென்காசி மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், "இவ்வழக்கில் மேலும் இருவரை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம். இந்தக் கொலை சம்பந்தமாக அழகர்சாமி, செந்தூர் குமார், ராஜலட்சுமி, பேச்சியம்மாள் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், ராஜ் மணிகண்டன், சுந்தரபாண்டி ஆகியோரை காவல்துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர்" என்றார். இதைத்தொடர்ந்து, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை மற்றும் சம்பவம் நடைபெற்ற நாஞ்சான் குளம் கிராமத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

உறவினர்களுக்கு இடையே உள்ள இடப்பிரச்சனையில் மோதல் ஏற்பட்டு அரிவாளால் வெட்டி 3 பேர் படுகொலை செய்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மானூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: நெல்லையில் பயங்கரம்... நிலத்தகராறில் ஓட ஓட அரிவாள் வெட்டு... மூன்று பேர் மரணம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.