ETV Bharat / state

விழுப்புரத்தில் நீட் தேர்வுக்கு எதிராக 5 லட்சம் கையெழுத்துக்களைப் பெற வேண்டும் - அமைச்சர் பொன்முடி அறிவுறுத்தல்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 11:29 AM IST

DMK signature campaign against NEET exam
நீட் தேர்வுக்கு எதிராக கையெழுத்து இயக்கம்

DMK signature campaign against NEET exam: விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக சுமார் 5 லட்சம் கையெழுத்துக்களைப் பெற வேண்டும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி

விழுப்புரம்: விழுப்புரத்தில் உள்ள தெற்கு மாவட்ட திமுக சார்பில், இளைஞர் அணி ஆலோசனைக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குப் பிறகு இளைஞர் அணியை முன்னெடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின், வருகிற டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடத்தவிருக்கும் மாநாட்டிற்கு விழுப்புரம் தெற்கு மாவட்டத்தின் சார்பில் பெருந்திரளாக இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்.

அன்றைய காலகட்டத்தில், நம்முடைய தளபதி இளைஞர்களை வழிநடத்திச் சென்றபோது மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் விழுப்புரம் மாவட்டத்தில், இளைஞர்கள் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். நம்முடைய தளபதி கரத்தை வலுப்படுத்தினர், நம்முடைய தமிழக முதலமைச்சரைப் போன்று தற்போது அமைச்சராக உள்ள தம்பி உதயநிதி, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மிகவும் வேகமாக செயல்பட்டு வருகிறார்.

நாம் அவருடன் கைகோர்த்து, மாணவர்களின் மருத்துவர் கனவைப் பறிக்கும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய ஒன்றுபட்டு பாடுபட வேண்டும். அதேபோன்று, நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமாக கையெழுத்து பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து இயக்கம், தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் கையெழுத்துக்கள் பெற வேண்டும்.

அதற்காக நாளை என்னுடைய தலைமையில் திருக்கோயிலூர் அரசுக் கல்லூரி முன்பாக கையெழுத்து இயக்கத்தை தொடங்க இருக்கிறேன். அதற்கு அடுத்த நாள், விழுப்புரம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பாக கையெழுத்து இயக்கம் தொடங்க இருக்கிறேன். இதில் மருத்துவ அணி, மாணவர் அணி, இளைஞரணி ஆகியோர் முன் நின்று நடத்த வேண்டும்.

மாணவர்கள் மட்டுமல்லாமல் அவருடைய பெற்றோரிடமும் கையெழுத்து இயக்கம் தொடங்க வேண்டும். மேலும், மாநில சுயாட்சியைக் காப்பாற்ற முதலமைச்சர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அதனால்தான், ஆளுநர் மீது கூட உச்ச நீதிமன்றத்திலேயே வழக்கு தொடுத்து இருக்கிறார், தமிழக முதலமைச்சர். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாம் தொடர்ந்து செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்னையில் சூரிய சக்தியுடன் இயங்கும் புதிய கழிப்பறைகள் கட்ட திட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.