ETV Bharat / state

வேலூரில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்

author img

By

Published : Dec 30, 2021, 2:46 AM IST

2022 புத்தாண்டு
2022 புத்தாண்டு

வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்றும் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகளை வேலூர் மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.

வேலூர்: மாவட்ட காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் (டிச. 31) அன்று இரவு வேலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதன் காரணமாக அனைவரும் வீட்டிலேயே அவரவர் குடும்பத்துடன் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

அனைத்து வழிபாட்டு தலங்களிலும் தமிழ்நாடு அரசினால் அறிவுறுத்தப்பட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி வரும் புத்தாண்டு தினத்தில் பொது இடங்களிலும் சாலையோரங்களிலும் பூங்கா மற்றும் அதனை போன்ற இடங்களிலும் கூட்டம் கூடுவதையும், இருசக்கர வாகனங்களில் சுற்றுவதும் தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் புத்தாண்டு தின பாதுகாப்பிற்காக மொத்தம் ஆயிரத்து 200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெளியூர் செல்வோர் பூட்டிய வீட்டின் விவரத்தை அருகிலுள்ள காவல் நிலையங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அவசர உதவி தேவைப்படுவோர் 100, 112 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறும், காவலன் செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தி உள்ளனர். ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், உயரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிளப்புகளில் புத்தாண்டு தொடர்பான நடனம், டிஜே, இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தீவிர குற்றங்களை தடுக்க சென்னை காவல் துறையில் புதுப் பிரிவு உருவாக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.