ETV Bharat / state

'எனது மண் எனது தேசம்'; காட்பாடியில் நடைபெற்ற மண் சேகரிக்கும் பணி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 3:22 PM IST

எனது மண் எனது தேசம் சார்பில் காட்பாடியில் நடைபெற்ற மண் சேகரிக்கும் பணி
எனது மண் எனது தேசம் சார்பில் காட்பாடியில் நடைபெற்ற மண் சேகரிக்கும் பணி

Enathu Mann Enathu Desam: காட்பாடி அருகே ‘எனது மண், எனது தேசம்’ இயக்கம் சார்பில் நடைபெற்ற மண் சேகரிக்கும் நிகழ்ச்சியினை இந்தியன் வங்கியின் கிராமப்புற வங்கித் துறை பொது மேலாளர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார்.

எனது மண் எனது தேசம் சார்பில் காட்பாடியில் நடைபெற்ற மண் சேகரிக்கும் பணி

வேலூர்: நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்த வீரா்களை நினைவுகூறும் வகையில் ‘எனது மண், எனது தேசம்’ இயக்கம் துவங்க பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அந்த இயக்கத்தின் கீழ் ‘அமுத கலச யாத்திரை’ நடத்தப்பட்டு
வருகிறது.

அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 7,500 சிறிய அளவிலான பானைகளில் மண் சேகரிக்கப்பட்டு, அந்தப் பானைகளில் உள்ள மண் அனைத்தும், டெல்லி தேசிய போர் நினைவிடத்துக்கு அருகே ஒன்றாகக் கொட்டப்பட்டு, மரக்கன்றுகள் நட்டு வைக்கப்படும்.

இது ‘ஒரே இந்தியா, தலைசிறந்த இந்தியா’ என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் சுதந்திரப் போராட்ட வீரா்களை நினைவுகூறும் வகையில், இந்த பூங்காவனம் அமைக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே கரசமங்கலம் என்ற கிராமத்தில், ‘எனது மண், எனது தேசம்’ என்ற இயக்கத்தின் சார்பில் மண் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்பகுதியில் மண் சேகரிக்கும் நிகழ்ச்சியினை இந்தியன் வங்கியின் கிராமப்புற வங்கித் துறை பொது மேலாளர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார். இந்தியன் வங்கியின் கிராமப்புற வங்கித் துறை பொது மேலாளர் சந்திரசேகரன் தலைமையில் மகளிர் குழுவினர், அமுத கலசங்களில் மண் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக மகளிர் குழுவினர் உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, மண் சேகரிப்பதை குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்திலும் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர், அந்த கிராமத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய சந்திரசேகரன், அவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரசேகரன், “நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களை நினைவு கூறும் வகையில், அமுத கலசம் யாத்திரை தொடங்கப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் சிறிதளவு மண் எடுத்து, இந்த மண் அனைத்தையும் டெல்லி கேட் அருகே கொட்டி, அங்கு பூங்காவனம் அமைக்கப்பட உள்ளது” என்று கூறினார்.

மேலும், “மத்திய அரசு, ஒவ்வொரு விவசாய குடும்பத்திற்கும் 4,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் ஹர்கர் கே.சி.சி அபியான் திட்டம் அறிவித்துள்ளது. அந்த திட்டத்தின் மூலம் பி.எம் கிசான் திட்டத்தில் நிதி உதவி பெறாத விவசாயிகளுக்கும் நிதி உதவி வழங்கப்படும். தமிழ்நாட்டில் இந்தியன் வங்கி சார்பில் நடப்பாண்டில் சுமார் 28 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளுக்கு வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்தியன் வங்கி சார்பில் மகளிர் குழுவினருக்கு அதிக அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு மகளிர் குழுவினருக்கு ஒரு கோடி ரூபாய் வரை கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் குழுவினர், வாங்கும் கடனை உடனடியாக திருப்பிச் செலுத்தி வருவதால், அவர்களுக்கு கேட்கும் தொகையினை வங்கிகள் வழங்கி வருகிறது” என்றும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை இந்தியன் வங்கியின் பொது மேலாளர் ராஜேஸ்வர ரெட்டி மற்றும் வேலூர் மாவட்ட முன்னாள் வங்கி பொது மேலாளர் ஜமால் மொய்தீன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: வேலூரில் "அசாம் பவன்" தங்கும் விடுதியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.