ETV Bharat / state

”இந்தியாவிலேயே இப்படி யாருமே இல்லை” - பிரதமர் மோடியை வியக்க வைத்த துரைமுருகன்

author img

By

Published : Mar 10, 2023, 5:09 PM IST

”இந்தியாவிலேயே இப்படி யாருமே இல்லை” - துரைமுருகனிடம் வியந்த பிரதமர்!
”இந்தியாவிலேயே இப்படி யாருமே இல்லை” - துரைமுருகனிடம் வியந்த பிரதமர்!

தன்னுடைய அரசியல் பயணம் குறித்து பேசியபோது, இந்தியாவிலேயே இப்படி யாரும் இல்லை என்று பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர்: பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதம் அடைந்த காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட மேல்பாடி தரைப்பாலத்தை 12.94 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், பொன்னை அணைக்கட்டை 19.50 கோடி ரூபாய் மதிப்பிலும் புனரமைக்கும் பணிகளுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (மார்ச் 10) அடிக்கல் நாட்டினார்.

அமைச்சர் துரைமுருகன் பேச்சு

அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “இந்த நிதிநிலை அறிக்கையிலேயே காட்பாடிக்கு சிப்காட் வந்துவிடும். அதற்கான பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதேபோல் காங்கேயநல்லூர் - சத்துவாச்சாரி இடையே பாலாற்றில் மேம்பாலம் கட்டுவதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

ஒரு நாள் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை நான் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர், “நீங்கள்தானே திமுக பொதுச்செயலாளர்? சட்டப்பேரவையில் எவ்வளவு நாளாக இருக்கிறீர்கள்?” என்று என்னிடம் கேட்டார். அதற்கு நான் 54 ஆண்டுகள் என்று பதில் அளித்தேன். உடனடியாக ‘What, 54 Years’ என ஆச்சரியப்பட்டார், பிரதமர். மேலும் ஒரே தொகுதியில் 13 முறை தேர்தலில் நின்றுள்ளேன் என்றும் கூறினேன். அதற்கு, ‘இந்தியாவிலேயே இந்த மாதிரி யாரும் இல்லை’ என மோடி கூறினார்.

12 முறை போட்டியிட்டவர் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி. ஆனால், நான் 13 முறை தேர்தலில் நின்றுள்ளதற்குக் காரணம் காட்பாடி தொகுதியையும், மக்களையும் எனது கோயிலாக, தாயாகப் பார்க்கிறேன். தமிழ்நாட்டிலேயே 2 ஆண்டில் அதிக பணிகளை செய்தது காட்பாடி தொகுதிதான். தற்போது பொன்னை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் அமைய உள்ள பகுதிக்கு அருகில் உள்ள சிவன் கோயில், அரிஞ்சய சோழன் மேல்பாடி போரில் இறந்ததன் நினைவால், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.

இந்த கோயிலைப் பற்றி நான் பேசி பேசியே, அதிகமானோர் வருகை தருகிறார்கள். இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை வைக்கிறார்கள். இது மாநில அரசிடம் இருந்தால் உடனடியாக செய்திருப்போம். ஆனால் இந்த கோயில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆகையால், அதன் அனுமதி பெற்று விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும். பெண்கள் நீங்கள் கேட்கலாம், அந்த 1,000 ரூபாய் எங்கே என்று. கவலைப்படாதீர்கள், விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்.

தேர்தலுக்கு முன் அந்த பாக்கியைக் கொடுத்து விடுவோம். தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வரும்போது பாக்கி இல்லாமல் பார்த்துக் கொள்வோம். இப்போது உள்ள பெண்கள் குழந்தைகளை போட்டு பொத்து பொத்துன்னு அடிக்கிறார்கள். அதற்கு காரணம், குழந்தைகளை அவர்கள் பெற்றெடுப்பதில்லை. கத்தரிக்கோல்தான் பெற்றெடுக்கிறது. நேரடியாக மருத்துவமனைக்கு செல்கிறார்கள்.

அங்கு மருத்துவர் வயிற்றை கிழித்து, ஆப்ரேஷன் செய்து வயிற்றிலிருந்து குழந்தையை தலையணையைப்போல் தூக்கிப் போட்டு விடுகிறார். பிறகு தாய் கேட்கிறாள், ஆணா அல்லது பெண்ணா என்று. கத்திரிக்கோல் பெற்றெடுத்தால் இப்படித்தான் கேட்பார்கள்” என்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “தமிழ்நாட்டு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணாமலை வெளியிடட்டும். அது அவருடைய இஷ்டம். அதுக்கு நாம் என்ன செய்ய முடியும்? ஒரு காலத்தில் திராவிட கட்சிகள்தான் தமிழ்நாட்டின் அடையாளம். ஆனால் இன்று பாஜகவை நம்பிதான் திராவிட கட்சிகள் உள்ளன என அண்ணாமலை கூறுவது என்பது, அவர்களுடைய கருத்து. அண்ணாமலை, ஜெயலலிதா உடன் ஒப்பிடுவது எல்லாம் எனக்குத் தெரியாது” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: இலவச லேப்டாப் அல்லது டேப் வழங்கல்.. அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.