வேலூர் காட்பாடி அடுத்த சேவூர் கிராமத்தைச்சேர்ந்தவர் வீரராகவன். இவரது மனைவி இந்திரா. இவர்களது மகன் வினோத் குமார் (28). இவர் வேலூரை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும், தற்போது மோசடிப் புகாரில் சிக்கியுள்ள தனியார் நிதி நிறுவனமான ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்தில் ஊழியர் மற்றும் ஏஜென்ட் ஆக இருந்து வந்தார்.
இவர் தனது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என சுமார் 30-க்கும் அதிகமான நபர்களிடமிருந்து சுமார் 50 லட்சம் ரூபாயிற்கும் அதிகமாக பணத்தைப்பெற்று மாதம் வட்டிக்குப்பணம் தரும் அந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். தற்போது பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை வளையத்தில் இருக்கும் ஐஎஃப்எஸ் நிதி நிறுவன இயக்குநர்கள் தலைமறைவாக இருப்பதால், கடந்த இரண்டு மாதங்களாக முதலீட்டாளர்களுக்கு வட்டிப் பணம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அந்நிறுவனம் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் (ஆக. 05) தமிழ்நாடு முழுவதும் உள்ள IFS நிதி நிறுவன அலுவலகம் மற்றும் ஏஜென்ட்கள் வீடுகளில் சோதனை நடந்தது. இந்நிலையில், வேலூரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர். இதனால் அச்சமடைந்த முதலீட்டாளர்கள் பணம் வழங்காதது குறித்து ஏஜென்ட் வினோத்குமாரிடம் தொடர்ந்து கேட்டுள்ளனர்.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான வினோத்குமார் நேற்றிரவு (ஆக. 06) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த தகவலறிந்த திருவலம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச்சென்று சடலத்தை மீட்டு, உடற்கூராய்வுக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், முதலீட்டாளர்களுக்குப்பதில் சொல்ல முடியாத விரக்தியில் வினோத்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், வினோத் குமார் எழுதி வைத்த கடிதமும் காவல் துறையினரிடம் சிக்கியது.
அந்த கடிதத்தில், “IFS நிறுவனத்தின் உரிமையாளர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்களான மோகன் பாபு, லஷ்மி நாராயணன், ஜனார்த்தனன், சுந்தரேசன் ஆகியோரின் PAN எண்ணைக்குறிப்பிட்டு, இவர்களின் பெயரில் இயங்கும் IFS நிதி நிறுவனத்தில் என்னிடம் கேட்ட நபர்களுக்கு முதலீடு செய்து கொடுத்துள்ளேன். இப்போது அவர்கள் இல்லை என்பதால் எனது மற்றும் என்னை சார்ந்தவர்களின் பணத்தை திருப்பி வாங்கித் தருமாறு இதை கண்காணிக்கும் துறையிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நான் கொடுத்த பணத்தின் ஆவணங்கள் அனைத்தும் எனது ஆன்லைன் புக்கில் உள்ளது. Indoasis app enter pin 7414 எனது மொபைல் வாட்ஸ் ஆப் சேட்டில் உள்ளது. என்னை நம்பியவர்களுக்கு எனது முடிவிலாவது பணம் கிடைக்கட்டும். Sorry to all. அனைத்து ஆவணங்களும் எனது பேங்கில் உள்ளது. காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களின் பணத்தையும் வாங்கித் தர வேண்டும்.
முதலீடு செய்த அனைவரும் அந்நிறுவனத்திடம் பணத்தை வாங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், வினோத் குமாரின் வீட்டில் இருந்த பாண்டு பத்திரங்கள், லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களை காட்பாடி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான காவல் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெரியார் சிலை குறித்து சர்ச்சை கருத்து - சாமியார் கைது