எல்பின் நிதி நிறுவன மோசடி வழக்கில் திருப்பம் - விசிக கவுன்சிலர் கைது!

author img

By

Published : May 27, 2023, 11:18 AM IST

எல்பின் நிதி நிறுவன மோசடி - விசிக கவுன்சிலர் கைது

திருச்சி மாவட்டத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த எல்பின் நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விசிக கவுன்சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி: எல்பின் என்ற தனியார் நிதி நிறுவனம், திருச்சி மாவட்டம் மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்தது. அது மட்டுமல்லாமல், இந்த நிதி நிறுவனத்திற்கு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், சென்னை மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கிளை அலுவலகமும் இருந்து வந்தது. அதேநேரம், எல்பின் நிறுவனத்தின் கீழ் அறம் மக்கள் இயக்கம், தனியார் டிவி உள்ளிட்ட பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.

இதன் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவது, விலை உயர்ந்த பொருள்கள் வழங்குவது, வெளிநாடு சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை தமிழ்நாடு முழுவதும் அறிவித்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறான இந்த ஆசை வார்த்தையை நம்பி, அந்த நிறுவனத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பணத்தை முதலீடு செய்ததாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து, அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களின் பணத்தை முறையாக வழங்காமல் பண மோசடி செய்ததாகவும், ஏமாற்றப்பட்டதாகவும் பல முறை அந்த நிறுவனத்தின் மீது பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பல கோடி ரூபாய் மோசடி செய்ததால், இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்து வந்தனர்.

மேலும், இந்தப் புகாரின் அடிப்படையில், எல்பின் நிறுவனத்தில் பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் அவ்வப்போது சோதனை செய்தனர். அதேபோல், முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என ஜிஎஸ்டி அதிகாரிகளும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை செய்தனர். ஆனால், தற்போது அந்த நிறுவனம் செயல்படவில்லை. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, எல்பின் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

பின்னர், இந்தக் குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில், நிறுவனத்தின் உரிமையாளர்களான ராஜா மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த நிறுவனத்தோடு தொடர்புடையவர்கள் யார் யார், அவர்கள் மக்களிடம் பணத்தை ஏமாற்றுவதற்கான காரணம் யார் என்பது குறித்து இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர்.

இதன் அடிப்படையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விடுதலை தொழிலாளர் முன்னனியின் மாநில துணைச் செயலாளரும், திருச்சி மாநகராட்சி 17வது வார்டு கவுன்சிலருமான பிரபாகரன் பண மோசடி வழக்கில் மூளையாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது. இதனை அறிந்த பிரபாகரன் ‌தலைமறைவாகி உள்ளார். இந்த நிலையில், தீவிர தேடுதல் வேட்டையின் முடிவில் விசிக கவுன்சிலர் பிரபாகரனை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் நேற்று (மே 26) கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆருத்ரா, ஹிஜாவு நிதி மோசடி: 'குற்றவாளிகளை நெருங்குவதில் சில சிரமம் உள்ளது' - ஐஜி கூறிய காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.