ETV Bharat / state

ஜன.20 அன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி.. வீடு வீடாக போலீசார் ஆய்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 4:10 PM IST

Updated : Jan 17, 2024, 4:31 PM IST

திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடி
திருச்சிக்கு வருகை தரும் பிரதமர் மோடி

PM Modi to visit Sri rangam temple: பிரதமர் மோடி வருகிற 20ஆம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு வருகை தர உள்ள நிலையில், வீடு வீடாகச் சென்று போலீசார் தீவிர ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கும்பாபிஷேகம், வருகிற ஜனவரி 22ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி 11 நாள் விரதம் மேற்கொண்டுள்ளார். மேலும், மோடி ஒவ்வொரு நாளும் ஒரு கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

இந்நிலையில், 108 வைணவத் தலங்களில் ஸ்ரீரங்கம் முதன்மையானது என்பதால், மோடி வருகின்ற 20ஆம் தேதி ஸ்ரீரங்கம் வந்து வழிபாடு செய்து விட்டு, அயோத்தி செல்ல திட்டமிட்டு உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி வருகையை ஒட்டி, பாதுகாப்பு நடவடிக்கைகளில் தமிழக போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். ஸ்ரீரங்கம் கோயில் மற்றும் அதனை ஒட்டியுள்ள வீதிகளில் வசிக்கும் மக்கள் பற்றிய கணக்கெடுப்பு பணிகளை, இன்று காலை முதல் போலீசார் தொடங்கியுள்ளனர்.

போலீசார் வீடு வீடாகச் சென்று குடும்பத் தலைவர் யார், என்ன தொழில் செய்கிறார், அவரது ஆதார் கார்டு, போன் நம்பர் போன்றவற்றை சேகரித்து வருகின்றனர். அத்துடன் குடும்பத்தில் எத்தனை பேர் உள்ளனர், அவர்கள் என்ன செய்கிறார்கள், படிக்கிறார்களா, வேலை செய்கிறார்களா, அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நிலையில், யாரும் இருக்கிறார்களா என கேட்டு வருகின்றனர்.

மேலும், 20ஆம் தேதிக்குள் அப்பகுதியில் வசிக்கும் நபர்கள் வீட்டிற்கு யாரும் வர உள்ளனரா போன்ற விவரங்களை சேகரித்து வருகின்றனர். அதே போன்று அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் என அனைவரிடமும் விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

மோடி வரும் நாளில் கோயிலுக்கு அருகே உள்ள வீதியில் வசிக்கும் நபர்களுக்கு ஐடி கார்டு கொடுக்கப்படும் எனவும், அந்த கார்டு உள்ளவர்கள் மட்டுமே அன்றைய தினம் வீதிகளுக்குள் வர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20ஆம் தேதி யாருக்காவது அவசர உதவி தேவைப்பட்டால், எந்த போன் எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது குறித்த விவரங்களையும் போலீசார் தெரிவித்தனர்.

அத்துடன் ஸ்ரீரங்கம் கோயில் பிரகாரங்களில் கடைகள், பிரசாத கடைகள், புத்தகக் கடைகள் என பல விதமான கடைகள் இயங்கி வருவதால், அனைத்து கடைகளில் உள்ளவர்களிடமும் போலீசார் விசாரனை மேற்கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து, கோயில் வீதியில் உள்ள கடைகளை இன்று முதல் மூடும்படி போலீசார் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் நாளை முதல் சனிக்கிழமை மாலை வரை கோயிலில் அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது குறித்து இன்று விமான நிலையம் மற்றும் திருவரங்கத்தில் உள்ள ஒரு மண்டபத்திலும் போலீசார், வருவாய்த்துறை, அறநிலையத்துறை, விமான போக்குவரத்துத் துறை, உள்ளிட்ட அனைத்து துறை உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிறாவயல் மஞ்சுவிரட்டில் சிறுவன் உள்பட இருவர் உயிரிழப்பு!

Last Updated :Jan 17, 2024, 4:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.