ETV Bharat / state

4 மாநிலங்களில் பாஜக வெற்றிக்கு காரணம் என்ன? - பழ.நெடுமாறன் பேச்சு

author img

By

Published : Mar 13, 2022, 8:56 AM IST

பழ.நெடுமாறன் பேட்டி
பழ.நெடுமாறன் பேட்டி

உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அதிகாரம், பணபலம் பயன்படுத்தி வெற்றி பெற்று உள்ளது. மேலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை முக்கிய காரணம் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.

திருச்சி: தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சர்வதேச மகளிர் தினவிழா நிகழ்ச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று (மார்ச் 12) நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்க பொதுச்செயலாளர் வழக்கறிஞர் அங்கயற்கண்ணி தலைமையில் 'மதவாத அரசியலும் - பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

வழக்கறிஞர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் பலர் பங்கேற்ற இந்த கருத்தரங்கில், தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பழ. நெடுமாறன்," அகில இந்திய துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு ஆளுநர், இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் இருப்பது தான் சரி, ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனி கல்வித்திட்டம் இருக்கக்கூடாது என்று பேசியுள்ளார். ஆளுநர் இந்தியாவின் அரசியல் சட்ட வரலாறு தெரியாமல் பேசியுள்ளார்.

ஆளுநருக்கு கண்டனம்

மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, பொதுப் பட்டியலுக்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றம் கூட்டி விவாதிக்க வேண்டிய பிரச்சனையை, அலங்கார பதவியில் உள்ள ஆளுநர் கருத்து தெரிவிப்பதற்கு தகுதியற்றவர், ஆளுநரின் இந்த போக்கினை வன்மையாக கண்டிக்கிறேன்.

பழ.நெடுமாறன் பேட்டி

30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை வரவேற்கிறேன். முதலமைச்சர் மீதமுள்ள ஆறு பேருக்கும் ஜாமீன் விடுதலை கிடைக்க சட்டரீதியாக நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும். 1983இல் இருந்து தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படையினர் வேட்டையாடி வருகின்றனர். இதுவரைக்கும் 700க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகள், வலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பல மீனவர்கள் சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் - சாத்தியமில்லை

நமது தமிழக மீனவர்களை காப்பாற்ற வேண்டிய இந்திய அரசு மற்றும் கடலோர காவல்படை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிங்களக் கடற்படையினருக்கு எதிரான நடவடிக்கையை இந்திய அரசு மற்றும் கடலோர காவல்படை எடுக்காதது என்பது தமிழக மீனவர்களை இந்திய மீனவர்கள் ஆக கருதவில்லை என்பதைக் காட்டுகிறது. ஒரே நாடு - ஒரே தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது. இது எதேச்சை அதிகார போக்குக்கு நாட்டை அழைத்துச் செல்லும். இது மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்காத போக்கு.

நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அதிகாரம், பணபலம் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மை முக்கிய காரணம். பாஜகவிற்கு எதிராக ஓரணி உருவாக்க இதுவரையிலும் முன்வரவில்லை. பாஜகவுக்கு எதிராக அனைத்து மாநிலக் கட்சிகளும் சேர்ந்து வலுவான அணி அமைக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: 'கல்வியும் - சுகாதாரமும் அரசின் இரு கண்கள்' - மாநாட்டில் முதலமைச்சர் உரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.