ETV Bharat / state

கனமழை எதிரொலி: கோபி அருகே குளம் உடைந்து ஊருக்குள் புகுந்த வெள்ளநீர்... பொதுமக்கள் அச்சம் - TN RAIN FLOOD UPDATE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 20, 2024, 9:50 AM IST

Gobichettipalayam Flood: கோபிசெட்டிபாளையம் அருகே பெய்த கனமழையால் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளநீர் வெளியேறுவதால் 40 கிராமங்களை சேர்ந்த மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு
கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

கனமழை காரணமாக ஊருக்குள் புகுந்த வெள்ளநீர் (Video Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதியில் கனமழை காரணமாக குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டு நீர் வழித்தடங்கள் மற்றும் விவசாய நிலங்களின் வழியாக அதிக அளவு நீர் வெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த் துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நம்பியூர், வரப்பாளையம், கோரக்காடு, ஆண்டிகாடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்து வந்தது. இந்நிலையில் கோபி, நம்பியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை திடீரென கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழை காரணமாக நம்பியூர் அருகே உள்ள சந்தன நகர்ப் பகுதியில் உள்ள குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த தொடர் கனமழை காரணமாக குளத்திற்கு அதிக அளவு தண்ணீர் வரத்து இருந்ததைத் தொடர்ந்து, குளத்திலிருந்த தண்ணீர் முழுமையாக வெளியேறி வருகிறது. மேலும், குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் சந்தன நகர், ஆண்டிக்காடு, கோரக்காடு, ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகளில், 155-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. தற்போது குளத்திவ் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து தகவலறிந்த வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் அந்த பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீர் வழித்தடங்கள் மற்றும் விவசாய நிலங்களின் வழியாக அதிக அளவு மழைநீர் வெளியேறி வருவதால் 40 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே தொடர்ந்து கனமழை பெய்ததால், மழைநீர் அதிகளவில் வெளியேறி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அதேபோன்று அருகில் உள்ள இச்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நெல்லையில் கடந்த 24 மணி நேரத்தில் 20.46 செ.மீ மழை பதிவு.. பிரதான அணைகளின் நீர்மட்டம் உயர்வு..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.