திருச்சி: மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் நேற்றிரவு (நவ.27) கனமழை பெய்தது. இதனால் பொய்கை குளத்தில் நீர் அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
குளத்தின் முகத்துவாரம் பகுதியில் உள்ள கோட்டைக்காரன்பட்டி ஊருக்குள் வெள்ள நீர் புகுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி நிர்வாகத்தினர் ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையை துண்டித்து, வெள்ளநீரை மடை வழியாக செல்லும்படி செய்தார். இதனால் ஊருக்குள் மேலும் வெள்ள நீர் புகாமல் தடுக்கப்பட்டது.
உதவி செய்ய லஞ்சம் கேட்ட அலுவலர்
இதையடுத்து தற்காலிக பாதை அமைக்க, வெள்ள நீர் இடையூறு இன்றி செல்ல ஏதுவாக, பொய்கை மலை வனப்பகுதியில் சில மரங்களை வெட்ட அனுமதிக்குமாறு வனத்துறை அலுவலகத்தில் முறையிட்டுள்ளனர்.
அதற்கு வனத்துறை அலுவலகத்தில் இருந்த பெண் அலுவலர் ஒருவர் மரங்களை வெட்ட ரூ.3000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் பெண் வனத்துறை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வெள்ளம் பாதிக்கப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தபின் கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
சாலை மறியலால் மணப்பாறை - மதுரை சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: Puducherry Rains: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப்பாதிப்பு