ETV Bharat / state

மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 2, 2024, 4:02 PM IST

CM Stalin request to the Prime Minister to declare Madurai airport as an international airport
முதலமைச்சர் ஸ்டாலின்

Chief Minister Stalin: திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட முனையத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில், மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காகவும், திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை திறந்து வைக்கவும், பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திருச்சிக்கு வந்தார். அவரை விமான நிலையத்திற்குச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார்.

பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர். இதனை அடுத்து, திருச்சி விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

  • திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் முன்னிலையில் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையம் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை… pic.twitter.com/ZrWvay6nGl

    — CMOTamilNadu (@CMOTamilnadu) January 2, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “தொட்ட துறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலமான தமிழ்நாடு, இந்திய திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றி வருகின்றது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் இதயப் பகுதியாக இருக்ககூடிய திருச்சியின் பன்னாட்டு விமான நிலையத்தில் 1,112 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய முனையத்தை பிரதமர் திறந்து வைத்து சிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற வகையில், தமிழ்நாட்டு மக்களின் சார்பாக என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இந்த துறையின் அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையம், தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய பன்னாட்டு விமான நிலையம். இதை தமிழ்நாடு அரசு மேலும் ரூ.318.85 லட்சம் செலவில், 294.57 ஏக்கர் நில எடுப்பு செய்து, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், திருச்சி உள்பட சென்னை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர், தூத்துக்குடி விமான நிலையங்களை விரிவாக்கம் மற்றும் நவீன மயமாக்க 3 ஆயிரத்து 118 கோடி ரூபாய் செலவில் 2 ஆயிரத்து 302.44 ஏக்கர் அரசு மற்றும் பட்டா நிலங்களை இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த விரிவாக்கப் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தென் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் ஆன்மிகப் பயணம் மேற்கொள்கின்றனர். பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர்.

அவர்கள் எளிதாக வந்து செல்வதற்கு ஏதுவாக, மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என நாங்கள் ஏற்கனவே வைத்த கோரிக்கையை பிரதமர் பரிசீலிக்க வேண்டும். மலேசியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாடு பண்பாட்டு மற்றும் வர்த்தக தொடர்பு கொண்டுள்ளது.

அதை கருத்தில் கொண்டு சென்னை - பினாங்கு, சென்னை - டோக்கியோ இடையிலான நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் துவங்க வேண்டும். சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டப் பணிகளுக்கு பங்கு பகிர்வு மாதிரி அடிப்படையில் மத்திய அரசின் பங்களிப்பை விரைந்து வழங்க பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்.

நெடுஞ்சாலைத் துறையைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இப்பொழுது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்ற பணிகளை விரைவுபடுத்த வேண்டும். சமீப காலமாக இருவழிச்சாலையாக மேம்படுத்துகின்ற நெடுஞ்சாலைகளுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் சிறு, குறு (MSME) நிறுவனங்கள்தான் பெல் பொதுத்துறை நிறுவனத்திற்கு தேவையான உதிரி பாகங்களை வழங்கி வந்தார்கள்.

தற்போது பெல் நிறுவனத்திடம் இருந்து இவர்களுக்கு கேட்பானை (procurement order) மிகவும் குறைந்து விட்டது. இதனால் இந்த பகுதியில் செயல்பட்டு வருகின்ற சிறு, குறு நிறுவனங்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளது. எனவே பெல் நிறுவனம் மீண்டும் அதிகப்படியான கேட்பானைகளை இவர்களுக்கு வழங்க ஆவண செய்யப்பட வேண்டும் என பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன்” என பேசினார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி.. ரூ.19,850 கோடியில் துவங்கி வைக்கும் திட்டப்பணிகள் என்னென்ன..?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.