ETV Bharat / state

திருச்சி சிவா எம்.பி.யின் மருமகன் மீது வழக்கு.. எதுக்கு தெரியுமா?

author img

By

Published : May 20, 2023, 11:20 AM IST

திருச்சி சிவாவின் மருமகன் மீது வழக்கு
திருச்சி சிவாவின் மருமகன் மீது வழக்கு

எம்பி திருச்சி சிவா மருமகன் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

திருச்சி: சுப்ரமணியபுரம் காந்தி தெருவில் விஜயசாரதி - செல்வி தம்பதி வசித்து வருகின்றனர். இந்த நிலையில், செல்வி, அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இந்த புகாரில், "திருச்சி மேற்கு வட்டாட்சியர் அலுவலகம் வாசல்‌ முன்பு ஆவின் பால் மற்றும் பொருள்கள் விற்பனை நிலையம் உள்ளது.

இந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி அன்று, அங்கு ஒரு இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. அந்த இருசக்கர வாகனத்தில் சாவியும் இருந்தது. இதனால் எனது கணவரான விஜயசாரதி, அருகில் இருந்த மாநகராட்சி அலுவலகத்திற்கு அதனைக் கொண்டு நிறுத்தினார். அப்போது, இதனைப் பார்த்த ஆவின் பூத்தில் பணிபுரியும் பணியாளர்கள், எனது கணவரைப் பிடித்தனர்.

அது மட்டுமல்லாமல், சாவி உடன் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை மாநகராட்சி அலுவலகத்திற்குள் கொண்டு சென்று விட்ட எனது கணவரை திருடியவர் எனக் கூறி அடித்தனர். அது மட்டுமல்லாமல், அவரை கடத்திச் சென்று தில்லை நகரில் உள்ள முத்துக்குமார் என்னும் கராத்தே முத்துக்குமார் வழக்கறிஞர் அலுவலகத்தில் வைத்து கொடூரமாக தாக்கி உள்ளனர்.

இதனையடுத்து சுய நினைவு இழந்த நிலையில் எனது கணவர் மீட்கப்பட்டார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான விஜயசாரதி, தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலைய உதவி ஆய்வாளர் மோகன், இது தொடர்பாக விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்துள்ளார்.

இதன்படி இந்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி, தாக்குதல் மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் முத்துக்குமார் உள்ளிட்ட நான்கு பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, கராத்தே முத்துக்குமார் தலைமறைவாகி உள்ளார்.

இந்த நிலையில், தற்போது வழக்கறிஞர் கராத்தே முத்துக்குமாரை கைது செய்ய அவரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இருப்பினும், தனக்கு முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரைக் கிளைக்குச் சென்ற முத்துக்குமாரின் மனு மீது, வருகிற ஜூன் 2ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும், அப்போது இந்த முன்ஜாமீன் குறித்து விசாரிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.

முன்னதாக, கராத்தே முத்துக்குமார் மீது 2017ஆம் ஆண்டு கார் திருடிய வழக்கு ஒன்றும் நிலவையில் உள்ளது. இந்த முத்துக்குமார், திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். மேலும், இவர் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ''இது கம்யூனிகேசன் பிரச்னை''.. அமைச்சர் கே.என்.நேரு - எம்.பி. திருச்சி சிவா சந்திப்பும் பின்னணியும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.