ETV Bharat / state

திருப்பூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

author img

By

Published : Apr 4, 2021, 5:29 PM IST

tiruppur district watch
திருப்பூர் தொகுதிகள் வலம்

ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள் உற்பத்திக்குப் பெயர் போன திருப்பூர் மாவட்டம், தமிழ்நாட்டின் ஏழாவது பெரிய நகரம். வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தொழில் நகரமும் கூட. திருப்பூருக்குச் சென்றால் எப்படியும் பிழைத்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் தென்மாவட்டங்கள், வடமாநிலத் தொழிலாளர்கள் இம்மாவட்டம் நோக்கி படையெடுப்பது அதிகம். அவர்கள் அனைவரையும் அரவணைக்கத் தவறுவதில்லை இப்பின்னலாடை நரகம். ஆண்டுக்கு பல கோடி ரூபாய் அந்நிய செலாவணி ஈட்டித்தரும் திருப்பூர் தன் வரலாற்று வேர்களை கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டத்துடன் இணைத்து வைத்திருக்கிறது. அமராவதி, பரம்பிக்குளம் ஆழியாறு நதிகளால் மாவட்டத்தில் 30 விழுக்காடு மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். திருப்பூரின் தாராபுரம் நெல் விதைக் களஞ்சியமாக விளங்கிவருகிறது. நெற்களஞ்சியமான தஞ்சாவூர் உட்பட 7 மாவட்டங்களுக்கு விதை நெல் அனுப்பி வைக்கும் தாராபுரம், மாநிலத்தின் 50 விழுக்காடு விதை நெல் தேவையைப் பூர்த்தி செய்கிறது. இத்தனை பெருமை தாங்கி நிற்கும் திருப்பூருக்குத் திருஷ்டி வைத்து போல இருக்கிறது டாஸ்மாக் வருமானம். மாநிலத்தில் அதிகமாக டாஸ்மாக் சரக்குகள் விற்கும் நகரங்களில் திருப்பூரும் ஒன்று. கடந்த 2009 ஆம் ஆண்டு கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களின் சில பகுதிகளைப் பிரித்து உருவாக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் வடக்கில் ஈரோடு, கிழக்கில் கரூர் மற்றும் ஈரோடு, மேற்கில் கோயம்புத்தூர், தெற்கில் திண்டுக்கல் மாவட்டங்களை எல்லைகளாக கொண்டுள்ளது. மேற்கு தொடர்மலைகளும், நீலகிரி மலையும் திருப்பூரை மதிலாக காத்து நிற்கின்றன.

வாசல்:

திருப்பூர் மாவட்டம், ஒரு மக்களவைத் தொகுதியையும், தாராபுரம்(தனி), அவினாசி (தனி) ஆகிய தனித்தொகுதிகள் உட்பட, காங்கேயம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

தொகுதிகள் உலா :

தாராபுரம் (தனி): ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனித் தொகுதியாக இருந்து வருகிறது தாராபுரம். அமராவதி ஆறு ஓடும் பகுதி. விவசாயத்தை முதன்மையாகக் கொண்ட தொகுதி. ஆடு, மாடு வளர்ப்பு, கறிக்கோழி உற்பத்தி உப தொழில்களாக இருக்கின்றன. தமிழ்நாட்டின் விதை நெல் தேவையைத் தாராபுரம் விதைப் பண்ணை பூர்த்தி செய்கிறது.

தொகுதியில் தொழில் வாய்ப்புகள் இல்லாததால், இளைஞர்கள் வேலைக்காகத் திருப்பூர் போன்ற நகரங்களுக்கு புலம்பெயர்ந்து செல்கின்றனர். முருங்கை விளைச்சல் அதிகமுள்ள மூலனூரில் முருங்கையைப் பதப்படுத்தும் தொழிற்சாலை, தாராபுரத்தில் தக்காளி சாறுபிழியும் தொழிற்சாலை நிறுவப்பட வேண்டும்; அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும்; குளத்துபாளையத்தில் மூடப்பட்டுள்ள கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறந்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்; தொகுதியில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும் என்பன தொகுதிவாசிகளின் முக்கிய கோரிக்கைகளாகும்.

காங்கேயம்: தொகுதிகள் மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட தொகுதி. கீழ்பவானி, பரம்பிகுளம் ஆழியாறு வாயிலாக பாசனம் பெறுகிறது. விவசாயம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலை, தேங்காய் பருப்பு உலர் களம், கைத்தறி, விசைத்தறி நெசவு ஆகியவை முக்கியத் தொழில். இங்கு 700க்கும் அதிகமான தேங்காய் எண்ணெய் ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கு அரசு விதித்துள்ள 5 விழுக்காடு 'வாட்' வரி, 1 விழுக்காடு 'செஸ்' வரி விதித்துள்ளது. இதனால் அந்தத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை மேம்படுத்த அரசு முன்வர வேண்டும். நலிவடைந்து வரும் கைத்தறி, விசைத்தறி தொழிலை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்; காங்கேயம், வெள்ளக்கோயில் கிராமச் சந்தைகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்; பிஏபியின் அணையில் இருந்து வட்டமலைகரை ஓடை அணைக்கு தண்ணீர் கொண்டுவர வேண்டும்; இதனால் விளைநிலங்கள் பயனடைவதுடன், நிலத்தடி நீரும் அதிகரிக்கும் என தொகுதி விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். தொகுதியில் நிலவும் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்கினறனர் தொகுதிவாசிகள்.

அவினாசி (தனி): அதிக ஆண்டுகளாக தனித் தொகுதியாக இருக்கிறது அவிநாசி. விவசாயம் பிரதானமான தொழில். அவிநாசி வட்டாரத்தில் விசைத்தறி, பம்பு செட் உற்பத்தி, புதிதாகப் பின்னலாடை தொழிலும் நடைபெறுகின்றன. அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில், திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோயில் ஆகிய இரண்டும் இங்குள்ள புகழ் பெற்ற கோயில்களாகும்.

திருமுருகன் பூண்டியைப் புராதனமான நகரமாக அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இங்கு ஒரு சிற்பக்கல்லூரி தொடங்கப்பட வேண்டும்; அவிநாசியை இரண்டாகப் பிரித்து சேவூரை மையமாக வைத்து தனி ஊராட்சி ஒன்று அமைக்கப்பட வேண்டும்; சேவூரில் புதிய பேருந்து நிலையம் அமைத்தல், அவிநாசியை நகராட்சியாக்குதல், விசைத்தறி தொழில் பேட்டை, குளம் குட்டைகளைத் தூர்வாருதல், புராதன கோயில்களை புனரமைக்கப்படுதல் வேண்டும் என்பன தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள்.

திருப்பூர் வடக்கு: தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மாவட்டத்தின் பெரிய தொகுதி. மாநகராட்சி பகுதிகளையும், அதனை ஒட்டிய கிராமப்புறங்களையும் உள்ளடக்கிய தொகுதி. விவசாயம், பின்னலாடைத் தொழில், பாத்திரம் உற்பத்தி முக்கியத் தொழிலாக உள்ளன.

தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனை கட்டட அடிக்கல் நாட்டப்பட்டு, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளதால் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படாதது, தொகுதிவாசிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் தொகுதிகள் வலம்: தேர்தல் 2021; எதிர்பார்ப்பும், களநிலவரமும்...!

மாநகராட்சியுடன் இணைந்த ஊராட்சி பகுதிகளில் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பின்னலாடை தொழில் துறையினர் சார்பில், வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள், மகளிர் விடுதிகள் கட்டிக் கொடுக்க வேண்டும்; பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்; ஊத்துக்குளி, கொங்குப் பிரதான சாலைகளில் போக்குவரத்து சீரமைப்பு, தேக்கமடைந்து நிற்கும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பன தொகுதி மக்களின் நிறைவேற்றப்படாத நீண்ட கால கோரிக்கை.

திருப்பூர் தெற்கு: தொகுதிகள் மறுசீரமைப்புக்கு பின்னர், 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தொகுதி இது. மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. மாவட்டத்தின் அடையாளங்களுள் ஒன்றான பின்னலாடை உற்பத்தி, இத்தொகுதியில் தான் அதிகம் நடைபெறுகிறது.

அதனாலேயே அதன் துணைத் தொழில்களான சாயமிடுதல், சலவை ஆலைகள், நிட்டிங், டையிங், பிரிண்டிங் போன்ற தொழில்களும் நடைபெறுகின்றன. ஏராளமான தென்மாவட்டவாசிகள் இங்கு வசிக்கின்றனர். அவர்களில் 60 விழுக்காட்டிற்கும் அதிகமானவர்களுக்கு வாக்குரிமையும் இருக்கிறது.

பழைய பேருந்து நிலையம், பல்லடம், தாராபுரம், காங்கேயம், மங்களம் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களுக்கு தீர்வு காண வேண்டும். முறையான குடிநீர் விநியோகம், நகரின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துதல், சுகாதாரத்தைப் பேணுதல் போன்ற அடிப்படை பிரச்னைகள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் உள்ளன.

பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்; அதிகரித்து வரும் போக்குவரத்திற்கு ஏற்ப சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும்; மாநகரப் பகுதிகளில் குப்பைகள் வாரக்கணக்கில் அள்ளப்படாமல் இருப்பதைவிடுத்து, உடனுக்குடன் குப்பைகள் அள்ளப்பட வேண்டும் என்பன இன்பிற கோரிக்கைகள் பட்டியல் தொடருகின்றன.

பல்லடம்: பல்லடம் தொகுதியின் பிரதானத் தொழில் கறிக்கோழிப் பண்ணை, விசைத்தறி, ஜவுளி உற்பத்தி, பின்னலாடை, சாய ஆலைகள், விவசாயம். பல்லடம் ஒன்றியம், பொங்கலூர் பகுதிகளில் காய்கறி உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. ஊராட்சி பகுதிகளில் சாலைகள் நிழற்குடைகள் நியாவிலைக் கடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசு கல்லூரி அமைக்கப்பட்டுள்ளது. தொகுதியில் 2 ஆவது கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டவில்லை என்பது மக்களின் அதிருப்தி.

தொழில்துறையில் வளர்ந்து வரும் பல்லடத்தில் அதற்கேற்ப மக்கள் தொகையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிகரிக்கும் மக்கள் தொகைக்கேற்ப அடிப்படை வசதிகளும், குடிநீர் விநியோகமும் செய்யப்பட வேண்டும்; பல்லடம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும் என்பன தொகுதியின் பொதுவான கோரிக்கை.

நலிவடைந்து வரும் விசைத்தறித் தொழிலை மீட்க மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்; இங்கு உற்பத்தியாகும் காடா துணிகளை விற்பனை செய்ய தனியாகச் சந்தை உருவாக்க வேண்டும்; கறிக்கோழிகளை வளர்க்க இலவச மின்சாரம் வழங்க வேண்டும்; மானியத்தில் தீவனம் வழங்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வைக்கின்றனர் விசைத்தறி நெசவாளர்கள், கறிக்கோழி பண்ணையாளர்கள்.

உடுமலைப்பேட்டை: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முக்கியமானத் தொகுதி உடுமலைப்பேட்டை. இந்தத் தொகுதிக்கு விஐபி தொகுதி என்ற சிறப்பு எப்போதுமுண்டு. இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் தொடர்ந்து அமைச்சர் பதவி வகித்து வருகின்றனர். தென்மேற்கு பகுதியில் இருக்கும் தொகுதி.

விவசாயம், கோழிப்பண்ணை, காற்றாலை, பஞ்சாலைகள், தென்னை நார் தொழிற்சாலைகள் நிறைந்தத் தொகுதி. காய்கறிகள் அதிகம் விளைவதால், ஒட்டன்சத்திரத்தை அடுத்த பெரிய தினசரி சந்தையும் இங்குள்ளது. உடுமலை நகரில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்; நகரில் செயல்படுத்தப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை; மழைக் காலங்களில் சாக்கடை நீர் வீடுகள், சாலைகளில் தேங்கும் நிலை உள்ளது.

தென்னை சார்ந்த தொழில்கள் அதிகம் நடைபெறுவதால், அதற்கான நலவாரியம் அமைக்க வேண்டும்; நூற்பாலைகள் நலிவடைந்து வருவதால் தொழிலாளர்கள் வேலையிழந்து வருகின்றனர். அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; காய்கறிகளை பாதுகாத்திட குளிர்பதனக்கிடங்கு அமைக்க வேண்டும்; மலைவாழ் மக்களின் இடிந்த வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையையும் வைக்கின்றனர்.

மடத்துக்குளம்: தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர், கடந்த 2011ஆம் ஆண்டு மடத்துக்குளம் தொகுதி உருவாக்கப்பட்டது. முழுவதும் கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதி. அமராவதி அணையும், திருமூர்த்தி அணையும் இந்தத் தொகுதிக்குள் அமைந்திருப்பதால் விவசாயமே இங்கு பிரதானமானத் தொழில்.

நெல், வாழை, கரும்பு, தக்காளி, வெங்காயம் விளைகின்றன. இங்கு விளையும் காய்கறிகள் கேரளாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மழைக்காலங்களில் அணைகளில் இருந்து வீணாகும் தண்ணீரைச் சேமிக்க அப்பர் அமராவதி அணையும், தடுப்பணைகளும் கட்ட வேண்டும்; இங்குள்ள மலைக் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி, 'செட்டில்மெண்ட்' அடிப்படையில் வீடுகள் கட்டித் தரவேண்டும்; காய்கறிகள், விளைப்பொருட்களை பாதுகாப்பதற்கு குளிர்பதனக்கிடங்கு அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கைகள் தொகுதியில் உள்ளன.

அதே போல் தொகுதியில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டித்தர வேண்டும்; கிராமங்களுக்குப் பேருந்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்கின்றனர்.

களநிலவரம்:

பின்னலாடை தொழிலால் உலகப் பிரபலம் அடைந்திருக்கும் மாவட்டம் திருப்பூர். திருப்பூரில் பிழைக்க முடியாதவர்கள் வேறு எந்த ஊரிலும் பிழைக்க முடியாது எனச் சொல்லும் அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது இந்தத் தொழில் நகரம். அதனால் மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது.

அதற்கேற்ப அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்படாதது மாவட்டத்தின் பெரும்குறை. தொழில்சாலைகள் மட்டுமின்றி விவசாயம், கறிக்கோழி வளர்ப்பு போன்ற தொழில்களும் நடந்து வருகின்றன. விளைப்பொருட்களைப் பாதுகாக்க குளிர்பதனக்கிடங்கு, கோழிகளுக்கு மானிய விலையில் தீவனம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைள் உண்டு.

மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில் மடத்துக்குளத்தில் திமுகவும், காங்கேயத்தில் அதிமுகவின் கூட்டணிக் கட்சியான கொங்கு இளைஞர் பேரவையும் வென்றிருக்க, மற்ற ஆறு தொகுதிகளையும் தன் வசம் வைத்திருக்கிறது அதிமுக. இம்முறை திமுக தன் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை விட்டுக்கொடுத்திருப்பதால் வெற்றிக்கான பந்தையத்தில் முந்தி, கணிசமான தொகுதிகளில் வெல்லலாம்.

பாஜகவின் கூட்டணியால் சிறுபான்மையினர் அதிகம் இருக்கும் திருப்பூர் தெற்குத் தொகுதியை, அதிமுக இழக்கும் வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டாலும் தனித் தொகுதியான தாராபுரத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுக்கு வெற்றிக்கான வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.