ETV Bharat / state

நிலையற்ற நூல் விலை: பின்னலாடை தொழிலில் பின்னடையும் அபாய நிலையில் தமிழகம்!

author img

By

Published : Aug 17, 2023, 2:57 PM IST

Etv Bharat
Etv Bharat

Tiruppur Yarn Price Issue: நூலின் விலை ஏற்றத்தால் திருப்பூரில் பாதித்து வரும் பின்னலாடை தொழில் குறித்த செய்தித் தொகுப்பை காணலாம்.

நூலின் விலை ஏற்றத்தால் திருப்பூரில் பாதித்து வரும் பின்னலாடை தொழில் குறித்த செய்தித் தொகுப்பு

திருப்பூர்: கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்து பணி செய்யும் நிறுவனங்கள்தான் திருப்பூரில் பிரதானமாக செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல். தொழில்சாலைகளில் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி மொத்தமாக நூல்களை கொள்முதல் செய்து ஆடைகள் தயாரிக்கப்படும்.

நூல்களின் விலை, மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டுதான் ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த நிலையில், நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் தொழில் துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.

நிலையில்லா நூல் விலை: கடந்த ஆண்டில் அடிக்கடி நூலின் விலை உயர்ந்து வந்தது. இதனையடுத்து நூல் விலையை குறைக்க தொழில் துறையினர் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் நூல் விலையில் 20 ரூபாய் குறைந்தது. தொடர்ந்து பிப்ரவரி மாதத்திலும் நூல் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி தொடரும் என நூற்பாலைகள் அறிவித்திருந்தது.

தொடர்ச்சியாக மார்ச், ஏப்ரல், மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களிலும் நூலின் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் நீடித்தது. இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு 20 ரூபாய் முதல் 25 ரூபாய் குறைந்தது. இதற்கிடையே நடப்பு மாதத்திற்கான (ஆகஸ்ட்) நூல் விலையை நூற்பாலைகள் கடந்த 1ஆம் தேதி அறிவித்தன. அதில் கடந்த மாத விலையே தொடரும் என்றும், எந்த மாற்றமும் இல்லை என்றும் நூற்பாலைகள் அறிவித்தன.

இதற்கிடையே நூலின் விலையை உயர்த்துவது மற்றும் இறக்குவதுமான விலை நிர்ணயம் செய்யும் பணியை நூற்பாலைகள் அமைப்பு கைவிட்டுள்ளது. மாதா மாதாம் விலை நிர்ணயம் என்ற நிலை மாறி, தினமும் அன்றைய நிலைக்கு ஏற்ப நூல் விலை நிர்ணயம் செய்ய முடிவு செய்து உள்ளார்கள்.

ஒரு கிலோ நூலின் விலை நிலவரம்: இன்று அனைத்து வகை நூல்களின் விலை கிலோவுக்கு 10 ரூபாய் உயர்ந்து உள்ளது. இதனால் நூல்களின் விலை எப்போது எவ்வளவு உயரும், அல்லது இறங்கும் என்று தெரியாத நிலை உருவாகி உள்ளது.

அதன்படி ஒரு கிலோ 10வது நம்பர் கோம்டு நூல் 175 ரூபாய்க்கும், 16ஆம் நம்பர் 185 ரூபாய்க்கும், 20வது நம்பர் கோம்டு நூல் 243 ரூபாய்க்கும், 24ஆம் நம்பர் 255 ரூபாய்க்கும், 30ஆம் நம்பர் 265 ரூபாய்க்கும், 34ஆம் நம்பர் 280 ரூபாய்க்கும், 40ஆம் நம்பர் 300 ரூபாய்க்கும், 20ஆம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ 235 ரூபாய்க்கும், 24ஆம் நம்பர் 245 ரூபாய்க்கும், 30ஆம் நம்பர் 255 ரூபாய்க்கும், 34ஆம் நம்பர் 270 ரூபாய்க்கும், 40ஆம் நம்பர் 290 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்லா நூல் விலை உயர்வு, இறங்கும் நிலையை கண்டித்து நூற்பாலைகள், பின்னலாடை நிறுவன அமைப்புகள் என அனைத்தும் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி மிகப்பெரிய ஆலோசனைக் கூட்டத்தினை அறிவித்து இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள நூற்பாலைகள் மற்றும் பின்னலாடை நிறுவன அமைப்புகள் கலந்து கொண்டு நூல் விலை நிர்ணயம் தொடர்பான முடிவுகளை எடுக்க இருக்கிறார்கள்.

இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது, “பருத்தி விலை உயர்வுதான் நூல் விலை உயர்வின் காரணமாக இருக்கிறது. நூல் விலை உயர்வு பனியன் உற்பத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மத்திய அரசு நூற்பாலைகள் அனைத்துக்கும் நேரடியாக பருத்தி வழங்க வேண்டும். இடைத்தரகர்கள் மூலம் வழங்கக் கூடாது. அப்போதுதான் பதுக்கலை தடுக்க முடியும்.

மேலும், பருத்தியை தமிழக அரசே கொள்முதல் செய்து நூற்பாலைகள் அனைவருக்கும் தர வேண்டும் என்றும், தமிழகத்தின் பருத்தி தேவை 110 லட்சம் கேண்டியாக உள்ள நிலையில், இங்கு 70 லட்சம் கேண்டி மட்டுமே உற்பத்தியாகிறது. அதற்கு மேல் வெளி மாநிலங்களைச் சார்ந்து இருக்கிறோம். எனவே, பருத்தி உற்பத்தியை தமிழகத்தில் அதிகரிக்க வேண்டும்.

தினமும் எப்படி வேண்டுமானாலும் நூலின் விலைய ஏற்றி இறக்கலாம் என்ற நிலையையும் மாற்றி அதை நிலைப்படுத்த வேண்டும். பருத்தி விலை ஏற்றம் மற்றும் பதுக்கலை கட்டுப்படுத்த வேண்டும். மின்கட்டண உயர்வும், பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. குஜராத், தமிழகத்துக்கு மிகப்பெரிய போட்டியாக உருவாகி வருகிறது.

தமிழக அரசு கவனத்துடன் செயல்படாவிட்டால் ஜவுளித் தொழில் வேறு மாநிலங்களுக்கு இடம் பெயரும் அபாய நிலை ஏற்பட்டு உள்ளது. தற்போது மலிவு விலை துணிகள், பங்களாதேஷ் நாட்டிற்கு இறக்குமதி போன்றவை திருப்பூர் தொழிலுக்கு போட்டியாக அமையும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதிக்காதது ஜனநாயகப் படுகொலை - அன்புமணி ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.