ETV Bharat / state

'அரசை குறை கூறுவதே ஸ்டாலினின் வாடிக்கையாகிவிட்டது' - அமைச்சர் கே.சி. வீரமணி

author img

By

Published : Nov 15, 2020, 8:52 PM IST

K.C Veeramani
K.C Veeramani

திருப்பத்தூர்: கரோனா காலத்திலும் முதலமைச்சர் பல்வேறு சானைகளை செய்துவந்தாலும் ஸ்டாலின் குறை கூறுவதிலேயே குறியாக இருப்பதாக அமைச்சர் கே.சி. வீரமணி விமர்சித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட சோமநாயக்கன்பட்டி, கள்ளியூர், பணியாண்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் பணியாண்டப்பள்ளி பகுதியில் ரூ. 15 லட்சம் மதிப்பிலான புதிய ஊராட்சி அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அமைச்சர் கே.சி. வீரமணி, "பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என பேசிய ஸ்டாலின் தமிழ்நாடு அரசு வரும் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்ததைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கக் கூடாது என பேசி வருகிறார். முதலமைச்சர் பழனிசாமி, கரோனா காலத்திலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்துவருகிறார். ஆனால் அவரை குறை கூறுவதே ஸ்டாலினின் வாடிக்கையாகி விட்டது. அவர் அரசுக்கு உதவி செய்யவில்லை என்றாலும் கூட உபத்திரம் செய்யாமல் இருக்கலாம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் முதலமைச்சர் கிராம மக்களின் தேவைகளை உணர்ந்து பல்வேறு சாதனை திட்டங்களை செய்து வருகிறார். பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தாருங்கள். அப்போது தான் நாங்கள் உற்சாகமாக வேலை செய்வோம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.