ETV Bharat / state

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு - சக ஊழியர்கள் மீது தாயார் குற்றச்சாட்டு

author img

By

Published : Apr 29, 2023, 9:42 PM IST

மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு - சக ஊழியர்கள் மீது தாயார் குற்றச்சாட்டு
மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்பு - சக ஊழியர்கள் மீது தாயார் குற்றச்சாட்டு

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினர்கள் உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் அருகே மின்சாரம் தாக்கி மின் ஊழியர் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினர்கள் உயிரிழந்தவரின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் தமிழ்ராஜ் (28). இவர் திருப்பத்தூர் அடுத்த மடவாளம் பகுதியில் உள்ள மின்சார வாரியத்தில் நிரந்தர மின் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்ராஜ் வழக்கம்போல் பணிக்குச் சென்றுள்ளார். குரும்பகேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சோமலாபுரம் பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரை பழுது பார்ப்பதற்காக தமிழ்ராஜ் ஏறி உள்ளார்.

அப்போது, தமிழ்ராஜ் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டதால் கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் தமிழ்ராஜ் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஏப்ரல் 29) தமிழ்ராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள், திருப்பத்தூர் ஆலங்காயம் செல்லும் சாலையில் அவரது உடலை வைத்து, தமிழ்ராஜின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக உயிரிழந்த தமிழ்ராஜின் தாயார் கூறுகையில், “எனது ஒரே மகனை ஆசையோடு வளர்த்து படிக்க வைத்து வேலையில் அமர்த்தினோம். என்னுடைய மகன் வளர்ச்சி பிடிக்காமல், என் மகன் உடன் பணியாற்றும் சக ஊழியர்கள் தேவராஜ் மற்றும் மின் பொறியாளர்கள், எனது மகன் இறப்பதற்கு திட்டமிட்டு சதி செய்துள்ளனர். எனவே, அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தண்டனை வழங்க வேண்டும்” என கூறினார்.

அதேநேரம், இது குறித்து திருப்பத்தூர் மின் பொறியாளர் பாண்டிய செல்வன் கூறுகையில், “உங்கள் குடும்பத்திற்கு ஒரு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். உரிய இழப்பீடு வாங்கித் தருகிறோம்” என்றார். மேலும், திருப்பத்தூர் வட்டாட்சியர் சிவப்பிரகாசம், கிராமிய காவல் துறையினர் மற்றும் மின் பொறியாளர் பாண்டிய செல்வன் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில், உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

இதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முன்னதாக, தமிழ்ராஜ் டிரான்ஸ்பார்மரில் ஏறுவதற்கு முன்பு மின்சாரம் ஆஃப் செய்து விட்டதாக உடன் பணியாற்றும் ஊழியர்கள் தகவல் அளித்ததன் பேரில், உறுதி செய்த பிறகே அவர் டிரான்ஸ்பார்மரில் ஏறியதாகவும், ஆனால் மின்சாரம் ஆஃப் செய்யப்படாமல் ஆன் செய்யப்பட்ட நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், தமிழ்ராஜ் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் இருந்தபோது, சக ஊழியர்கள் காப்பாற்ற முயற்சிப்பதில் தாமதம் ஏற்படுத்தினர் என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதையும் படிங்க: கத்தியுடன் விரட்டிய மணல் கடத்தல் கும்பல் - போலீசில் தஞ்சம் அடைந்த VAO!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.