550 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு: கடத்தல் லாரி மீட்பு

author img

By

Published : Jun 14, 2022, 10:58 PM IST

கடத்தல் லாரி மீட்பு

வேலூர் அருகே 550 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்து கடந்த மாதம் திருடுபோன கடத்தல் லாரியை மீட்ட காவல் துறையினர், 2 பேரை கைது செய்தனர்.

திருப்பத்தூர்: ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த நித்தியானந்தம். இவரது டிப்பர் லாரி ஒன்று வேலூர் அடுத்த பிள்ளையார் குப்பத்தில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனை கடந்த 18.05.2022 அன்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது தொடர்பாக சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் லாரி உரிமையாளர் நித்தியானந்தம் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சத்துவாச்சாரி காவல் துறையினர் முதற்கட்டமாக லாரி நிறுத்தப்பட்டிருந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அதில் சென்ரோ காரில் வரும் இரண்டு நபர்கள் லாரியை நோட்டமிட்டு அதில் ஒரு நபர் லாரியை கடத்தி செல்வது பாதிவாகியிருந்தது. இக்காட்சியை வைத்து லாரி சென்ற சாலைகளில் உள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்துள்ளனர்.

கடத்தல் லாரி மீட்பு
கடத்தல் லாரி மீட்பு

முகம் சரியாக பதிவாகாததால் லாரியை கண்டுபிடிக்க வேலூர் எஸ்பி ராஜேஷ் கண்ணண், வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை காவலர்கள் பிள்ளையார் குப்பத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சியை அடிப்படையாக வைத்து நாகப்பட்டினம் வரை சுமார் 550 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர்.

மேலும் சைபர் கிரைம் காவல் துறையின் உதவியுடன், மூன்று இடங்களில் இருந்து சுமார் 60 ஆயிரம் செல்போன் நம்பர்களை ஆய்வு செய்தும் அதில் இருந்து 300 எண்களை இறுதி செய்தும் அவற்றின் மூலம் லாரி கடத்தி சென்றவர்களை கண்டறிந்தனர். இதற்காக மொத்தம் 700 கிலோ மீட்டர் பின் தொடர்ந்துள்ளனர்.

இதனையடுத்து லாரியை கடத்தி சென்ற ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மனோஜ் டிவாரி, கன்னியாகுமாரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவர் ஓசூரில் இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் கடத்தப்பட்ட லாரி நாமக்கல்லை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவரிடம் விற்கப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து லாரியும் மீட்கப்பட்டது.

மேலும் லாரி கடத்தலில் கைது செய்யப்பட்ட இருவர் நீதிமன்ற காவலில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இருவர் மீது 6 மாநிலங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நெல்லை அருகே வம்பிழுத்த காமெடி நடிகர்: கார் கண்ணாடி உடைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.