துரை வையாபுரி அரசியலுக்கு வருவாரா? - வைகோ விளக்கம்

author img

By

Published : Oct 12, 2021, 10:46 AM IST

vaiko-speke-about-durai-vaiyapuri

தொண்டர்கள் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும் என்று தனது மகன் துரை வையாபுரி அரசியலுக்கு வருவது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி: விளாத்திகுளம் நாகலாபுரம் அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த மதிமுக நிர்வாகி எரிமலை வரதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இந்நிலையில் அவரது வீட்டிற்குச் சென்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, மறைந்த எரிமலை வரதன் திருவுருவப் படத்திற்கு மலர்த்தூவி மரியாதை செய்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "பாஜக தலைவர் அண்ணாமலை பெங்களூருவில் காவல் துறை அலுவலராக இருந்தவர். இன்னும் அதே காவல் துறை பார்வையில்தான் பேசிவருகிறார். அரசியல் கொள்கை பற்றி அவருக்குத் தெரியாது" என்றார்.

போதைப்பொருள்கள் விவகாரம்

குஜராத்தில் அதானி துறைமுகத்திலிருந்து போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டது குறித்து பாஜக தலைவர்கள் இதுவரை எந்த ஒரு பதிலும் கூறவில்லை என்ற கேள்விக்கு, "இதில் அவர்களே குற்றச்சாட்டில் இருக்கும்போது அவர்கள் எப்படி பதில் கூற முடியும். மேலும் கரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய முதல் இடத்தில் தமிழ்நாடு இருக்கிறது" என பதிலளித்தார்.

துரை வையாபுரி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, "இரண்டு ஆண்டு காலமாக எனக்கே தெரியாமல் கட்சிக்காரர் வீடுகளுக்கு சுப நிகழ்ச்சி, துக்க நிகழ்ச்சி எனப் போய்வந்தார். கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு உடல்நலக் குறைவு எனத் தகவல் கேட்டாலும் சென்றுவந்தார். சிகிச்சைக்கு உதவி செய்துவந்துள்ளார். இது எனக்குத் தெரியாது.

வைகோ விளக்கம்

துரை வையாபுரி அரசியல் குறித்து

அதன்பின்னர் எனக்குத் தெரியாமலேயே திருமண வீடுகளில் அவரது படத்தைச் சுவரொட்டிகள் போடக்கூடாது என அவர்களிடம் சொன்னேன். மாநாட்டுப் பந்தலில் அவர் படம் போடக் கூடாது எனக் கூறினேன். அப்படிப் போடப்பட்டிருந்ததை அகற்றச் சொல்லி இருக்கிறேன். இதே செயலில் நிர்வாகிகள் ஈடுபட்டால் கட்சியைவிட்டு நீக்கவும் தயங்க மாட்டேன் எனக் கூறினேன்.

நான் அவரை ஊக்குவிக்கவில்லை. சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர். சிலர் அவர்களைக் கொண்டுவர வேண்டும் என்று அரசியலில் திட்டமிட்டுச் செய்கிறார்கள். நான் அவரை ஊக்குவிக்கவில்லை; அதே நேரத்தில் வந்துவிடக் கூடாது என்று தடுப்பதற்கு எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சித்துப் பார்த்தேன். அதை மீறி இப்பொழுது காரியங்கள் நடக்கின்றன.

தொண்டர்கள் விருப்பம்

என்னை மீறி தொண்டர்கள் எங்களுக்கு வழிகாட்ட நல்ல ஒரு வழிகாட்டி வேண்டும். அதற்கு எல்லா தகுதியும் துரை வையாபுரியிடம் இருக்கிறது என அழைத்துக் கொண்டு போகின்றனர். இக்கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. தொண்டர்கள் விருப்பம் எதுவோ அது ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும்" என்றார் விரிவாக.

இதையும் படிங்க : 'வருமுன் காப்போம்' திட்டம்: இன்று 1,250 மருத்துவ முகாம்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.