திருச்செந்தூர் : உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர் சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்த அவரை அங்கிருந்த பக்தர்கள் புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "அரசியலில் தான் தற்போது மௌன விரதம் கடைப்பிடித்து வருவதாக தெரிவித்தார்.
மேலும் அரசியலில் ஒருவர் கருத்து சொல்லும் போது அதனால் பிரச்சனைகள் வந்தால் அந்தக் கட்சி தான் அவரை பாதுகாக்க வேண்டும் என்றார்.
அரசியலுக்கு தன்னை அழைத்தால் எப்போதும் பணி செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்த அவர் நான் சார்ந்த கட்சி என்னை அழைத்தால் அவர்களுக்கு தான் லாபம் என்றும் அழைக்காவிட்டால் எனக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக 400 இடங்களில் வெற்றி பெறும் என்றும் மீண்டும் மோடிதான் பிரதமாவார் எனவும் கூறினார். , தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இளம் தலைவராக திறம்பட செயல்படுகிறார் என்றும் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைக்கூலியாக செயல்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர்களின் விமர்சனத்திற்கு பதில் அளித்த அவர், அரசே அனைத்து வியாபாரங்களையும் செய்ய முடியாது என்றும், தமிழக அரசு பல்வேறு பணிகளை அதானி போன்ற நிறுவனங்கு கொடுத்திருக்கிறது என்றும், கார்ப்பரேட் என்பதே தவறான வார்த்தை என பதிலளித்தார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வீட்டுக்கு வீடு தேசிய கொடிகளை ஏற்றுவது அனைவருக்கும் சுதந்திர உணர்வை வளர்க்கும் என்றும், உலக நாட்களில் இந்தியா போன்ற ஒரு சுதந்திர நாடு எங்குமில்லை என்றும் அனைத்து மக்களுக்கும் அளவு கடந்த சுதந்திரத்தை இந்தியா வழங்கி வருவதாக தெரிவித்தார்.
அவர் இனி வரும் காலங்களில் அனைத்து நாட்களிலும் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தால் மகிழ்ச்சியாக இருக்கும் எனவும் எஸ்வி. சேகர் தெரிவித்தார்.
இதையும் படிங்க : ஐநூறு மீட்டர் நீளமுள்ள தேசிய கொடியை கையில் ஏந்தி பாஜக பேரணி