ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிறப்பு சட்டம் - ஆதரவாளர்கள் கோரிக்கை!

author img

By

Published : Sep 4, 2021, 6:25 PM IST

செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள்
செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என ஆதரவாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை திறக்க வேண்டும் என ஆலையின் ஆதரவாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை ஆதரவாளர்கள் இன்று (செப்.4) தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.

அப்போது அவர்கள் பேசுகையில், “ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்ட காலத்திலிருந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறது. 2018 ஆம் ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ஆலை மூடப்பட்டிருந்த நிலையிலும் சமூக வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள்

பாகிஸ்தானில் அதிகரித்த தாமிர உற்பத்தி

இதன்மூலம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள், சுயதொழில் பயிற்சி போன்ற பல நன்மைகள் பெண்களுக்கு கிடைத்து வந்தன. தற்போது அந்த செயல்பாடுகளும் தடைப்பட்டிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலையின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு தரும் மரியாதை கூட ஆதரவாளர்களுக்கு கிடைப்பதில்லை. எதிர்ப்பாளர்களை அழைத்து கருத்துக்களை கேட்பது போல், ஆலைக்கு ஆதரவாளர்களான எங்களது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கருத்துக்களை கேட்க வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின், நாட்டின் தேவை காரணமாக 100 விழுக்காடு வெளிநாட்டிலிருந்து தாமிரம் இறக்குமதி செய்யப்படுகிறது. இங்கு ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால், பாகிஸ்தானில் தாமிர உற்பத்தி அதிகரித்துள்ளது.

கையூட்டு பெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள்

இங்குள்ள ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் பாகிஸ்தானில் உள்ளவர்களிடம் கையூட்டு பெற்றுக்கொண்டு, அந்நியர்களின் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர். ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியின் வளர்ச்சியே பின்தங்கி விட்டது.

இந்நிலையில் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி எதிர்ப்பாளர்கள் குழு ஆட்சியில் உள்ளவர்களை சந்தித்து வருகின்றனர். எங்களது கோரிக்கைக்கு செவிசாய்த்து, தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்” என்றனர். கூட்டத்தில் ஒப்பந்ததாரர் சங்கம் சார்பில் தியாகராஜன், வழக்கறிஞர் அணி சார்பில் மணிகண்ட ராஜா, ஜெயகனி (தாயகம் டிரஸ்ட்) உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கொடைக்கானல், ராமேஸ்வரத்தில் ஹெலிகாப்டர் இறங்குதளம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.