ETV Bharat / state

வழக்கறிஞரைத் தாக்கிய மனுதாரர் வெட்டி கொலை.. ஸ்ரீவைகுண்டம் கொலையின் பின்னணி என்ன?

author img

By

Published : Aug 4, 2023, 7:07 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில்வழக்கறிஞரைத் தாக்கிய மனுதாரர் வெட்டி கொலை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில்வழக்கறிஞரைத் தாக்கிய மனுதாரர் வெட்டி கொலை

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரைத் தாக்கிய மனுதாரர் மாயாண்டியை, அன்றைய தினம் இரவே மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் சுடலை கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது 31). இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் மாயாண்டி மீது செய்துங்கநல்லூர் காவல்நிலையத்தில் ஆடு திருட்டு, மணல் திருட்டு என பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கால்வாய் மெயின் ரோடு தெருவைச் சேர்ந்தவர் சுடலைக்கண்ணு மகன் தேவகண்ணன் (வயது 39). இவர் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மாயாண்டி வழக்குகளை தேவகண்ணன் நடத்தி வருகிறார். மேலும் மாதம் தோறும் நடைபெறும் விசாரணைக்கு மாயாண்டி முறையாக வருவதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தேவகண்ணன் மாயாண்டியை கண்டித்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக மாயாண்டி வருகை தந்துள்ளார்.

அப்போது வழக்கு தொடர்பாக பேசுகையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றவே இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். பின் மேல் சிகிச்சைக்காக மாயாண்டியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முற்பட்டுள்ளனர்.

ஆனால் மாயாண்டி திடீரென்று ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை முன்பு நின்ற பேருந்தின் கீழ் படுத்துக் கொண்டு தேவகண்ணன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர், அவரை பேசி சமாதானப்படுத்தி போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சைக்கு செல்லாமல் வீட்டிற்கு சென்று உள்ளார்.

இதற்கிடையில் நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டில் தனது மனைவியுடன் மாயாண்டி இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த ஒரு மர்ம கும்பல் மாயாண்டியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதை தடுக்க வந்த அவரது மனைவி செல்வி மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே மாயாண்டி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த செய்துங்கநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அதன் பின்னர் மாயாண்டி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த செல்வியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் வழக்கறிஞருக்கும், மாயாண்டிக்கு இடையேயான பிரச்னையால் கொலை செய்யப்பட்டரா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னையா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: உணவு டெலிவரி ஊழியர் வெட்டி கொலை, வீட்டை சூறையாடிய ஊர் மக்கள்; நெல்லையில் பரபரப்பு!!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.