ETV Bharat / state

ஆசிரியரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முற்றுகை!

author img

By

Published : Mar 23, 2023, 7:01 PM IST

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை
ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசிங்கம் மகன் பாரத் (38). இவர் எட்டையபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் பகுதியில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பாரத் கடந்த 21 ஆம் தேதி அப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அந்த வகுப்பில் படிக்கும் ஒரு மாணவர் பாடத்தை கவனிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆசிரியர் பாரத் அந்த மாணவனை முன்னாள் வந்து உட்காரும்படி கூறியுள்ளார். இந்நிலையில் அந்த மாணவர் முன்னாள் வரும் போது தவறி கீழே விழுந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து நேற்று முன்தினம் ( மார்ச் 21) அந்த மாணவனின் தாத்தாவான முனியசாமி (53), மனைவி மாரிசெல்வி ஆகியோர் அறிய,பின் ஆசிரியர் பாரத்தை கண்டிக்கச் சென்றுள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் மாலை ஆசிரியர் பாரத், பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது அங்கு வந்த 2ஆம் வகுப்பு மாணவனின் பெற்றோரான சிவலிங்கம் (34), செல்வி (28), மற்றும் மாணவனின் தாத்தா முனியசாமி, மாரிசெல்வி ஆகியோர் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

மேலும், ஆசிரியர் பாரத்தை இழிவாகப் பேசி, பள்ளி வளாகத்திற்குள் ஆசிரியரை ஓட ஓட விரட்டி கை மற்றும் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்தச் சம்பவமானது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வந்த நிலையிலும், ஆசிரியர் பாரத் அளித்த புகாரின் பேரிலும், எட்டையபுரம் காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில், எட்டையபுரம் காவல் நிலைய காவல் துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து, பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து ஆசிரியரை தாக்கிய நபர்கள் மீது 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிவலிங்கம், செல்வி மற்றும் முனியசாமி ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிவலிங்கம் மாமியார் மாரிசெல்வியை இதுவரை பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

அதைப்போல் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவலிங்கம் மனைவி மாரிசெல்வியை நேற்று வெளியே விட்டுவிட்டதாகவும், இது குறித்து கேட்டால் ஜாமீனில் வெளியில் விட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுவதாக தெரிகிறது. இந்த நிலையில் தெலுங்கு வருடப்பிறப்பு நாள் விடுமுறையான நேற்று எப்படி ஜாமீன் வழங்கினார்கள் என கீழநம்பியாபுரம் கிராம மக்கள் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பள்ளி ஆசிரியரை தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தினால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: சொத்துக்காக அண்ணனை கத்தியால் சரமாரியாக தாக்கிய தம்பிகள்.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.