சொத்துக்காக அண்ணனை கத்தியால் சரமாரியாக தாக்கிய தம்பிகள்.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

By

Published : Mar 23, 2023, 3:39 PM IST

thumbnail

திருப்பத்தூர்: சொத்துக்காக உடன் பிறந்த அண்ணனை கத்தியால் தாக்கிய சம்பவம் நாட்டறம்பள்ளி அருகே பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூர் குப்பத்தைச் சேர்ந்தவர், சித்தப்பன்.

இவருக்கு சிகாமணி, சிவலிங்கம், லட்சுமணன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் மூத்த மகனான சிகாமணி வெளியூர் சென்று ஒரு ஏக்கர் 15 சென்ட் அளவிலான இடத்தை சொந்தமாக வாங்கியுள்ளார். சிகாமணிக்குச் சொந்தமான இடத்தை சொந்தம் கொண்டாடும் வகையில் சிவலிங்கம் மற்றும் லட்சுமணன் அவ்வப்போது சண்டை இட்டு வந்தனர்.

இந்நிலையில் புதன் கிழமை காலை(மார்ச் 22) வாய்த் தகராறு முன்பை விட அதிகமாகியுள்ளது. இதில் கோபமடைந்த சிவலிங்கத்தின் மனைவி தீபா யாருக்கும் தெரியாமல், சிகாமணி வீட்டிற்கு காலை 7 மணியளவில் சென்றுள்ளார். தான் மறைத்து வைத்திருந்த மிளகாய்ப்பொடியை சிகாமணி மனைவி அம்சா மற்றும் அவருடைய மகன் ஸ்ரீதரன் ஆகியோர் மீது தூவியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சிகாமணி தம்பி சிவலிங்கம், லட்சுமணன் மற்றும் அவரது தந்தை சித்தப்பன் ஆகியோர் கத்தி, இரும்புக்கம்பி, கட்டை போன்ற ஆயுதங்களாலும் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனால் பலத்த காயமடைந்த சிகாமணி மற்றும் அவருடைய மனைவி அம்சா மற்றும் அவருடைய மகன் ஸ்ரீதர் ஆகியோர் அருகிலிருந்த நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சொத்து பிரச்னைக்காக அண்ணனையே கத்தி மற்றும் கொடூர ஆயுதங்களால் தாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.