ETV Bharat / state

அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - ஆஜராகாத அமலாக்கத்துறையால் வழக்கு ஒத்திவைப்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 1:11 PM IST

தூத்துக்குடி முதன்மை நீதிமன்றம்
அனிதா ராதாகிருஷ்ணன்

Minister Anitha Radhakrishnan Case: அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், அமலாக்கத்துறையின் மனு மீதான விசாரணை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி: கடந்த 2001 - 2006ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் வீட்டு வசதி வாரிய அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள், சகோதரர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான காலக்கட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் வாங்கப்பட்ட ரூபாய் 6 கோடியே 50 இலட்சம் மதிப்பிலான 160 ஏக்கர் நிலம் உள்ளிட்ட 18 சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது. இவ்வழக்கை தூத்துக்குடி முதன்மை நீதிமன்ற நீதிபதி செல்வம் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கில் தங்களையும் மனுதாரராக இணைக்க கோரி அமலாக்கத் துறை, கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை 90% முடிவடைந்து உள்ளதால், இதில் அமலாக்க துறையை சேர்த்துக் கொள்ள முடியாது என லஞ்ச ஒழிப்பு துறையினர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வழக்கு ஆகஸ்ட் 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் சார்பில் வழக்கறிஞர் மனோகரன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். ஆனால் அமலாக்கத்துறை சார்பில் யாரும் ஆஜராகவில்லை.

இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகாததை தொடர்ந்து, நீதிபதி செல்வம், வழக்கை செப்டம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு சம்பந்தமாக, அனிதா ராதாகிருஷ்ணன் தம்பிகளான சிவானந்தன், சண்முக ஆனந்தன், அனிதா ராதாகிருஷ்ணனின் மகன்கள் ஆனந்த மகேஸ்வரன், ஆனந்த ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

இந்தமுறையும் அமலாக்கத்துறை சார்பில் யாரும் ஆஜராகாததை தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கறிஞர் சேது ஆஜரானார். இதனால் இந்த வழக்கை தூத்துக்குடி முதன்மை மாவட்ட நீதிமன்ற நீதிபதி செல்வம், அக்டோபர் 11 ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்தார்.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.