ETV Bharat / state

"ரவுடிகள் அட்டகாசம் செய்தால் என்கவுன்டர் செய்து தூக்கி வீச வேண்டும்" - அண்ணாமலை பேட்டி!

author img

By

Published : Aug 12, 2023, 10:02 PM IST

ரவுடிகள் அட்டகாசம் செய்தால் என்கவுன்டர் செய்து தூக்கி வீச வேண்டும் - அண்ணாமலை பேட்டி
ரவுடிகள் அட்டகாசம் செய்தால் என்கவுன்டர் செய்து தூக்கி வீச வேண்டும் - அண்ணாமலை பேட்டி

'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையின் 14 வது நாளாக இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு உறையாற்றிய அண்ணாமலை தப்பு செய்கிறவர்கள் எல்லாம் திமுகவினர் என்பதால் காவல்துறை வேடிக்கை பார்ப்பதாக கூறியுள்ளார்.

ரவுடிகள் அட்டகாசம் செய்தால் என்கவுன்டர் செய்து தூக்கி வீச வேண்டும் - அண்ணாமலை பேட்டி

தூத்துக்குடி: ரவுடிகள் அட்டகாசம் செய்தால் என்கவுன்டர் செய்து தூக்கி வீச வேண்டும் எனவும், தப்பு செய்கிறவர்கள் எல்லாம் திமுகவினர் என்பதால் காவல்துறை வேடிக்கை பார்ப்பதாகவும் விளாத்திக்குளத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொண்டுள்ள 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரை பயணம் 14வது நாளாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தொடங்கியது. சுப்பிரமணியபுரம் விலக்கு அருகே தொடங்கிய பாத யாத்திரை பயணம் 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு விளாத்திகுளம் நகரின் பிரதான வீதிகள் வழியாக சென்று மகாகவி பாரதியார் பேருந்து நிலையம் முன்பு நண்பகல் 1 மணி அளவில் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கு கூட்டத்தில் அண்ணாமலை உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "திமுக தனது 2021ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் செண்பகவல்லி அணையை சரி செய்து தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி என 3 மாவட்டங்களுக்கும் முழுமையான தண்ணீரை கொடுப்போம் என உறுதி கொடுத்து, பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துள்ளனர்.

இந்த ஊர் திமுக எம்.எல்.ஏ., காற்றாலை கம்பெனிகளிடம் கமிஷன் கேட்ட ஆடியோ தமிழ்நாடு முழுவதும் பரவியது. இவருக்கு குட்டி செந்தில்பாலாஜி என்று பெயர் உள்ளது. மணலை சுரண்டி அதில் வரும் பணம் மூலம் வாக்குக்கு பணம் அளித்து, மீண்டும் எம்.எல்.ஏ.க்களாக வருவார்கள். ஏழை மக்கள் ஏழைகளாகவும், விவசாயிகள் விவசாய கூலிகளாகவும் தான் இருப்பார்கள்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: அமைச்சர் அன்பில் மகேஷ்-க்கு உடல்நலக்குறைவு :பெங்களூரு மருத்துவமனையில் அனுமதி !

மேலும் "குலசேகரன்பட்டினத்துக்கு பாரத பிரதமர் புதிய ராக்கெட் ஏவுதளம் வழங்கி உள்ளார். இதனை ஒரு சுற்றுலா தளமாக மாற்றுவோம் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான பலதரப்பட்ட தொழிற்சாலைகள் வந்துவிடும்.

எனவே, தமிழக முதலமைச்சர், தயவு செய்து மத்திய அரசுடன் இணக்கமாக பேசி, பிரதமர் மோடி வழங்க உள்ள ஏவுதளத்தை முறையாக பயன்படுத்த வேண்டும். வேகமாக கட்டுமான பணிகளை தொடங்கி, இங்குள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும்" என்றார்.

தமிழக காவல்துறையினர் குறித்து பேசிய அவர் "கண்டிப்புக்கும், ஒழுங்குக்கும் பெயர்போன தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. ரவுடிகள் அட்டகாசம் செய்தால் என்கவுன்டர் செய்து தூக்கி வீசவேண்டும். அதற்கு தான் ஆட்சி இருக்கிறது. ஆயுத பூஜையன்று பொட்டு வைத்து பூஜை நடத்துவதற்காகவா காவல்துறைக்கு துப்பாக்கி கொடுக்கப்பட்டுள்ளது. தப்பு செய்கிறவர்கள் எல்லாம் திமுகவினர் என்பதால் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது" எனக் கூறினார்.

மேலும் அவர், "3வது முறையாக 400 எம்.பி.க்களுடன் மீண்டும் மோடி பிரதமராக வருவார். தமிழகம், புதுச்சேரியில் இருந்து 40 எம்.பி.க்களை நாம் உருவாக்கி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் அரசியல் மாற்றம் என்பது நடக்கும். ஆனால் அதற்கு முன்பு இந்தியாவிலே பிரதமராக மோடி இருக்க வேண்டும். அப்படி இருந்தார் என்றால் தமிழகத்தில் அரசியல் மாற்றம் நடக்கும். மக்கள் எங்களோடு கைகோர்த்து நின்றால் தமிழகத்தை மாற்றிக்காட்டுவோம்" என்று அண்ணாமலை கூறினார்.

இதையும் படிங்க: தோடர் பழங்குடி மக்களை சந்தித்த ராகுல் காந்தி.. பழங்குடி மக்களுடன் பாரம்பரிய நடனமாடி மகிழ்ச்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.