"கேரள மீனவர்களை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் நாங்கள் கட்டுப்படுத்துவோம்" அரசை எச்சரித்த மீனவர்கள்!!

author img

By

Published : May 20, 2023, 4:11 PM IST

கேரள விசைப்படகு மீனவர்கள் தமிழக எல்லைக்குள் அத்துமீறில்

தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் விதிக்கப் பட்டுள்ளதையடுத்து கேரள விசைப்படகு மீனவர்கள் தமிழக எல்லைக்குள் அத்துமீறியதுடன் படகுகளை சேதபடுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழக அரசு இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழக மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கேரள விசைப்படகு மீனவர்கள் தமிழக எல்லைக்குள் அத்துமீறில்

தூத்துக்குடி: தமிழக கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலமாக ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்த நிலையில் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இந்த நிலையில் அண்டை மாநில கேரள விசைப்படகு மீனவர்கள் பெரியதாழை பகுதியில் அத்து மீறி நுழைந்து பைபர் படகில் மீன்பிடித்து கொண்டிருந்த மீன்பிடி வலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.

இது குறித்து சேதப்படுத்தப்பட்ட அந்த படகில் இருந்த மீனவர் ராஜன் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “கடலில் 15 மைல் தொலைவில் தொழில் பார்க்க போய் கொண்டிருந்தோம். அப்போது கேரள மாநிலத்தில் உள்ள படகுகள் வந்து, மீன் பிடித்து கொண்டிருந்த வலையை அடித்து இழுத்து கொண்டு சென்றனர்.

அந்த நேரத்தில் நாங்கள் பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட நங்குரத்தை அவர்கள் வலையில் போட்டும், எங்களின் பைபர் படகோடு வெட்டி இழுத்துச் சென்றனர். இதனால் கயிற்றை அறுத்து விட்டு கரைக்கு வந்து சேர்ந்தோம். தூத்துக்குடியில் மீன் வளர்ச்சிக்காக தடை காலம் போடப்பட்டுள்ளது. ஆனால் கேரளாவில் இருந்து 6 நாட்டிக்கல் 5 நாட்டிக்கல் தொலைவு வரை மீன்பிடிக்கின்றனர்.

வலையை அடித்து சேதப்படுத்திய போது காலில் விழுந்து கெஞ்சினோம். கேட்காமல் வயிற்றில் அடித்த மாதிரி 1 லட்சம் ரூபாய் வலையை அடித்து சென்றனர். இனி இது போன்ற செயல் நடக்காத வண்ணம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனை மிக பெரிய போராட்டமாக மாறும் முன்னர் இதனை அரசு கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டும் என வேண்டிக் கேட்கிறேன்” என்றார்.

பின்னர் இது குறித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் விசைப்படகு சங்க செயலாளர் ஜவஹர் கூறுகையில், “தமிழகம் முழுவதும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை மீன்பிடி தடைக்காலம் மத்திய அரசு மற்றும் மாநில அரசு அமல்படுத்தி இருக்கின்றது. இதனால் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. இந்த நிலையில் கேரள விசைப்படகுகள் கொச்சின், கொல்லம் மீனவர்கள் தூத்துக்குடி கடற்பகுதியில் உள்ள பெரியதாழையில், ஐந்து மைல் கடல் தொலைவில் மீன் பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெரியதாழை பகுதியில் உள்ள சிறிய பைபர் படகு வலைகளை இழுத்து சேதப்படுத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு தொடர்ந்து அட்டூழியம் செய்து வரும் கேரள மீனவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு பாதுகாப்பு கொடுக்கும் நிலையில் தான் இருக்கின்றதா? கடலோர காவல் படை என்ன செய்து வருகின்றது. இன்னும் கேரள விசைப்படகுகளை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்தவில்லை என்று சொன்னால் நாங்கள் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு வரும்.

எங்கள் தொழிலை பாதுகாக்க வேண்டும், கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தால் இரண்டு மாநிலத்திற்கும் பிரச்சனை தான் வரும். இது தொடர்பாக ஏற்கனவே முறையிட்டு இருக்கிறோம். இதை இன்று வரை தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. தமிழ்நாடு அரசும் மீன் வளத்துறையும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பாக கோரிக்கையை முன்வைக்கின்றோம், மீன்பிடி தடைகால நிவாரணம் மீனவர்களுக்கு இன்று வரை கொடுக்கப்படவில்லை.

இந்த பணம் பள்ளி கட்டணத்திற்கு கால்வாசி கூட பொருந்தாது. அந்த குறைந்த பட்ச நிவாரணத் தொகையை கூட இன்றும் வழங்கவில்லை என்றால் எந்த அடிப்படையில் மீனவர்களை பாதுகாக்கிறார்கள் என்று தெரியவில்லை. மீனவர்களை பாதுகாக்க கூடிய அரசாக தெரியவில்லை. ஆகவே, உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் ஒரு எம்பி இருக்கிறார்கள். இன்று வரை எங்களுடைய குறைகள் ஏதும் தீர்க்கப்படவில்லை. பல வருடங்களாக பல கோரிக்கைகள் முன்வைத்து வருகின்றோம். மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றுவரை செய்து தரப்படவில்லை.

தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு துறைமுகத்தில் அடிப்படை வசதிகள் இரண்டு ஆண்டுகளாக திமுக ஆட்சி வந்த பின்பும் தூத்துக்குடியில் மீன் வளத்துறை அமைச்சர் இருந்தும் மீன்பிடி துறைமுகத்தில் அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை என்றார்.

இதையும் படிங்க: கொளத்தூரில் மீன் வடிவில் வண்ண மீன் வர்த்தக மையம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.