ETV Bharat / state

கொளத்தூரில் மீன் வடிவில் வண்ண மீன் வர்த்தக மையம்!

author img

By

Published : May 20, 2023, 2:30 PM IST

கொளத்தூரில் மீன் வடிவில் வண்ண மீன் வர்த்தக மையம்
கொளத்தூரில் மீன் வடிவில் வண்ண மீன் வர்த்தக மையம்

சென்னை கொளத்தூரில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள வண்ண மீன் வர்த்தக மையத்தின் திட்ட வரைபடம் தயாராகி உள்ளது.

சென்னை: கொளத்தூர் பாடசாலை தெரு, தெற்கு மாட வீதி ஆகிய தெருக்களில் 200க்கும் மேற்பட்ட வண்ண மீன் விற்பனை கடைகள் உள்ளன. இங்கு 300 வகையான வண்ண மீன்கள் (அலங்கார மீன்) உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதி ஆகியவை பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.

சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் இந்தத் தொழிலை மேற்கொண்டு வரும் நிலையில், வண்ண மீன் உற்பத்தியைப் பெருக்கவும், வண்ண மீன்களை எளிதாக சந்தைப்படுத்தவும், ஏற்றுமதி மூலம் தமிழ்நாட்டின் வண்ண மீன் வர்த்தகத்தை அதிகரிக்கவும் சென்னை கொளத்தூரில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வண்ண மீன் வர்த்தக மையம் நிறுவப்படும் என்று, கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொளத்தூரில் வண்ண மீன்கள் வர்த்தக மையம் அமைக்க இடத்தைத் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வந்தது. இதனையடுத்து, தற்போது இடம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதேநேரம், அலங்கார மீன் உற்பத்தியில் மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு அடுத்த படியாக, சென்னையில் உள்ள கொளத்தூர் அலங்கார மீன் வர்த்தகத்தின் முக்கிய மையமாக உள்ளது.

வர்த்தக மையத்திற்காக 3.94 ஏக்கர் பரப்பிலும், நிர்வாக கட்டடத்திற்காக 4 ஆயிரத்து 785 சதுர அடியிலும் அலங்கார மீன் வர்த்தக மையத்தை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது. மேலும், மீன் வடிவில் வர்த்தக மையத்தை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, திட்ட வரைபடம் தற்போது தயாராகி உள்ளது.

முன்னதாக கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மீன்வளத் துறை மானியக் கோரிக்கையின்போது பேசிய மீன்வளத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை கொளத்தூரில் 50 கோடி ரூபாய் செலவில் வண்ண மீன் வர்த்தக மையம் நிறுவப்படும் என அறிவித்தார்.

இந்த கொளத்தூர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற நட்சத்திர தொகுதி ஆகும். ஆசியாவிலேயே அதிக அளவிலான வண்ண மீன்கள் விற்பனை செய்யும் சந்தை என்ற பெருமைக்குரிய கொளத்தூர் பாடசாலை தெரு மற்றும் தெற்கு மாட வீதியில் விற்கப்படும் வண்ண மீன்கள் மற்றும் அதன் உப பொருட்களுக்கு திரைப் பிரபலங்கள் முதல் பலரும் நிரந்தர வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர்.

இதனால், குடியிருப்புகள் மிகுந்த இந்த குறுகிய தெருக்களில் அதிகப்படியான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக இருக்கிறது. எனவே, இந்தப் பிரச்னையை களையவும், வண்ண மீன் விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, உலகத் தரத்தில் வண்ண மீன் உற்பத்தி சந்தையில் வருவாயைப் பெருக்கவும், இந்த வண்ண மீன் வர்த்தக மையம் அமைக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு உள்பட அரசு அதிகாரிகள், வர்த்தக மையம் அமைப்பதற்காக பாடி - வில்லிவாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள சிங்காரவேலன் பள்ளி அருகே இருக்கும் அகத்தீஸ்வரன் கோயிலுக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்வது தொடர்பாக நேரில் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து, பல மாதங்களாக இது குறித்த எந்தவொரு தகவலும் வராமலே இருந்தது. இந்த நிலையில்தான், தற்போது கொளத்தூரில் அமைய உள்ள மீன் வடிவிலான வண்ண மீன் வர்த்தக மையத்தின் திட்ட வரைபடம் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: ரூ. 33 கோடியில் உருவாகும் பொருநை அருங்காட்சியகம்.. எப்படி இருக்கும்? பிரமிக்க வைக்கும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.