ETV Bharat / state

அண்ணாமலையார் கோயிலில் புரட்டாசி மாத பிரதோஷம்.. நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 9:37 AM IST

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு, நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

annamalaiyar-temple-purattasi-matha-pradosham-special-abhishekam-to-lord-nandi
அண்ணாமலையார் கோயில் புரட்டாசி மாத பிரதோஷம்..நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

அண்ணாமலையார் கோயில் புரட்டாசி மாத பிரதோஷம்..நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை: புரட்டாசி மாத பிரதோஷ தினத்தையொட்டி உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

சிவன் அருள் கிடைக்க பதினொரு பிரதோஷங்கள் விரதமிருந்து வழிபட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒரு மாதத்தில் 2 முறை பிரதோஷ காலம் வந்து செல்கிறது இந்த இரண்டு பிரதோஷங்களிலும் சிவாலயங்களில் விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் அருகே பெரிய நந்திக்கு புரட்டாசி மாத பிரதோஷம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

புரட்டாசி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு அண்ணாமலையார் கோவிலில் உள்ள பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள் தூள், அபிஷேகத்தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெரிய நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய வண்ண வண்ண மலர்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் காட்டப்பட்டது.

பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த அனைத்து காரியங்களும் நிறைவேறும், திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும், குழந்தைப்பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். இதையடுத்து பிரதோஷ விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.