ETV Bharat / state

கடினமாக உழைத்தும் கூட்டணி கட்சிக்கு சென்ற திருச்சி தொகுதி.. செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு கூறியது என்ன? - Minister KN Nehru speech in trichy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 25, 2024, 1:36 PM IST

Minister KN Nehru: பிரதமர் மோடியை தைரியமாக முதலில் எதிர்த்து பேசியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என திருச்சியில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு கருத்து தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் மாவட்ட அவை தலைவர் பேரூர் தர்மலிங்கம் , அம்பிகாபதி ஆகியோர் தலைமையிலும் திமுக முதன்மை செயலாளர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் போது

திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் உழைத்துக்கொண்டு இருந்தபோது, இத்தொகுதியை திமுக கூட்டணிக் கட்சிக்கு கொடுப்பது என திமுக தலைமை முடிவெடுத்ததால், தலைமையின் உத்தரவை ஏற்று மனம் நோகாமல், முகம் சுளிக்காமல், தொடர்ந்து கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காகப் பாடுபட்டு சிறப்பாக செயலாற்றியதற்காக திமுக கழகத்தோழர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

செயல் வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு பேசிய வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

பெரம்பலூர் தொகுதியிலும் திமுக கட்சியினர் எதையும் எதிர்பாராமல் தொடர்ந்து அத்தொகுதியில் கடுமையாக பாடுபட்டதாகவும் என்றும் உங்களுக்கு நிறையக் கடமைப்பட்டிருப்பதாகவும் நீங்கள் சொல்கிற பணிகளைத் தட்டாமல் செய்பவனாக இருப்பேன் எனவும் மேலும் நமது சட்டமன்ற உறுப்பினர்களும், நமது உள்ளாட்சி பிரதிநிதிகளும் அவ்வாறே இருப்பார்கள் என அமைச்சர் நேரு பேசினார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 101வது பிறந்தநாள் விழாவை நாம் சீரோடும் சிறப்போடும் கொண்டாட வேண்டுமெனவும் திருச்சி மாவட்டத்தில் 402 ஊராட்சிகள் 2 ஆயிரம் கிராமங்களிலும் கலைஞரின் திருவுருவப்படத்தை வைத்து, அவருக்கு மரியாதை செலுத்த வேண்டுமாறும் திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் கலைஞர் கருணாநிதி 40 ஆண்டுக் காலம் செய்த பணியை தற்போதைய முதல்வர் மு‌.க.ஸ்டாலின் பதவி ஏற்ற 3 ஆண்டு காலத்தில் செய்து முடித்துள்ளதாகப் பேசினார்.மேலும் இந்தியா கூட்டணியில் இருந்து நித்தீஷ் குமார், மம்தா பானர்ஜி வெளியே போனபோதிலும் இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என உழைத்தவர்களில் முதன்மையானவர் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எனத் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பணியும் செய்யாத பிரதமர் மோடியை இந்தியாவில் எதிர்த்துப் பேசிய முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் என்றும் திருச்சி பஞ்சபூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டுமெனவும் மிக உயரமான கருணாநிதி சிலை அமைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறிய அவர் தமிழ்நாடு முதலமைச்சரிடம் இது குறித்து பரிந்துரை செய்ய இந்த கூட்டத் தீர்மானம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று பேசினார்.

இதையும் படிங்க:"பிரதமர் மோடிக்கு தேர்தல் பிரசாரத்தில் பேச நிரந்தர தடை விதிக்க வேண்டும்" - டி.செல்வம் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார்! - Congress Against PM Modi

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.