ETV Bharat / state

கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்து அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம்...

author img

By

Published : Aug 31, 2022, 12:49 PM IST

Updated : Aug 31, 2022, 1:14 PM IST

Etv Bharat
Etv Bharat

ஆந்திராவில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதை எதிர்த்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆர்ப்பாட்டம் நடத்தினார்

திருவள்ளூர்: ஆந்திர மாநில அரசு கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரண்டு தடுப்பணைகள் கட்ட ரூபாய் 177 கோடி நிதி ஒதுக்கீடு செய்வதற்கான ஆயத்த பணிகளையும் முன்னெடுத்து வருகிறது. இந்தப் பகுதியில் தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று (ஆக.30) நடைபெற்றது.

இந்த தடுப்பணையால் திருவள்ளூர் மாவட்டம் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைவார்கள் என்றும், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கக்க்கூடிய பூண்டி ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் தடைபடும் என்றும், இதனால் பொது மக்களுக்கு பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆகியவற்றை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர், திருத்தணி தொகுதி தமிழ்நாடு எல்லையான பள்ளிப்பட்டு பேரூராட்சி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமகவை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இந்த ஆர்பாட்டத்திற்கு முன்னிலை வகித்து தடுப்பணை கட்டுக் ஆந்திர அரசை எதிர்த்தும், தடுப்பணை கட்டக்கூடாது என்ற பதாகையுடன் ஊர்வலமாக தொண்டர்களுடன் நடந்து வந்தார்.

ஆர்பாட்டத்தில்
ஆர்பாட்டத்தில்

ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "தமிழ்நாடு அரசு உடனடியாக ஆந்திர மாநில அரசு கட்டும் தடுப்பணை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டில் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். சென்னையில் வசிக்கும் ஒரு கோடி மக்களுக்கு நீர் ஆதாராமாக இருக்கக்கூடிய பூண்டி ஏரிக்கு இந்த கொசஸ்தலை ஆற்றில் இருந்துதான் நீர் வருகிறது. இந்த கொசஸ்தலை ஆற்று தண்ணீரை தடுத்து ஆந்திர மாநில அரசு அணை கட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்றார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில்,"திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் இருக்கக்கூடிய கொசஸ்தலை ஆற்றுக்கு தண்ணீரானது ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மா பள்ளி அணையில் இருந்து வருகிறது. இந்த அணையின் இரண்டு இடங்களில் தடுப்பணைகள் கட்ட ஆந்திர மாநில அரசு சுமார் ரூபாய் 177 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதற்கான திட்டங்களை வகுத்து விரைவாக செயல்பாடுகளிலும் இறங்கி உள்ளனர். தமிழ்நாடு அரசு உடனே இதனை தடுத்து நிறுத்த வேண்டும். சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உச்சநீதிமன்றம் வரை சென்றாவது ஆந்திரா அரசு கட்டி வரும் தடுப்பணையை தடுத்து நிறுத்த வேண்டும்.

கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநில அரசுகள் தமிழகத்திற்கு வரவேண்டிய நீர் ஆதாரங்களை தடுத்து நிறுத்தி வருவதால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைகின்றனர். மேலும், இதற்கான செயல் திட்ட வடிவங்களை தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். நீர் நிலை செயல் திட்டத்திற்கு என்று தனி கவனத்தை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

கொசஸ்த்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை எதிர்த்து பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் தஞ்சாவூர்க்கு அடுத்தபடியாக இந்த திருவள்ளூரில்தான் அதிகப்படியான நீர் நிலைகள் உள்ளன. எனவே, இந்த நீர் நிலைகளை பாதிக்கும் வகையில் தடுப்பணை கட்டும் ஆந்திர மாநில அரசினை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இந்த ஆர்ப்பாட்டம் மூலம் ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு நான் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன்.

இரு மாநில அரசு உறவுகளும் மக்களின் நல்லுறவுகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆகையால் கொசஸ்தலை ஆற்றுக்கு வரவேண்டிய தண்ணீரை தடுத்து நீங்கள் தடுப்பணை கட்டும் திட்டத்தினை கைவிட வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் ராஜாக்கள் ஆண்ட காலத்தில் 42 ஆயிரம் நீர்நிலைகள் ஏரி & குளங்கள் இருந்தது.

தற்போது 50 ஆண்டுகாலங்களாக ஆட்சி செய்து வரும் அரசுகளின் ஆட்சியில், 5 ஆயிரம் நீர்நிலை ஏரி & குளங்களை காணவில்லை. மேலும், தற்போது தமிழ்நாட்டில் 37,000 நீர் நிலைகள் ஏரி & குளங்கள் மட்டுமே உள்ளது. எனவே, நீர்நிலை ஆக்கிரமிப்பு தடுப்பது இன்றியமையாதது ஆகும் என்று உயர் நீதிமன்றம் எடுத்து வரும் நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம்.

அதுமட்டுமில்லாமல் நீர்நிலை ஆக்கிரமிப்பு இதனை தடுக்க வேண்டுமென்றால் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இதற்கான ஒரு குழுவை அமைக்க வேண்டும். அரசியல் சார்பற்ற இந்த குழு தமிழ்நாட்டில் எந்த அரசு வந்தாலும் நேர்மையாக செயல்பட்டு நீர் நிலைகளை காக்க வேண்டும்.

இந்த சிறப்பு குழுவை ஏற்பாடு செய்ய பாமகவின் வழக்கறிஞர் பாலு மூலமாக சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்து இது சம்பந்தமாக நீர் நிலைக்கு என்று தனிக் குழுவை ஏற்படுத்த வலியுறுத்துவோம் எனத் தெரிவித்தார். மேலும், திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா எல்லை அருகில் ஆந்திர மாநிலத்தில் கரும்பு சர்க்கரை அரவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் கழிவு நீர் பள்ளிப்பட்டு பகுதியில் செல்லும் லவா ஆற்றில் கலக்கின்றது.

இதனால் பள்ளிப்பட்டு சுற்றி வசிக்கும் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் பொதுமக்களின் குடிக்கும் தண்ணீரும் அவர்கள் பயன்படுத்தும் அத்தியாவசியமான தண்ணீரும் மாசு அடைந்துள்ளது. இதனை தமிழ்நாடு அரசு தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

நீர் நிலை பாதுகாப்புக்கு என்று தமிழ்நாடு அரசு சிறப்பு செயல் திட்டங்களை செயல்படுத்தி விரைவாக தமிழ்நாட்டில் நீர் நிலைகளை காக்க வேண்டும். மீண்டும் தடுப்பணைகளை கட்டுவதற்கு ஆந்திரா அரசு முன் நின்று செயல்படுத்தினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் செய்யப்படும்" என தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலம் சட்டப்பேரவை உறுப்பினர் சிவக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: நெல்லுக்கு புதிய குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தது தமிழ்நாடு அரசு

Last Updated :Aug 31, 2022, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.