ETV Bharat / state

'விஸ்வகர்மா யோஜனா' மோடியின் சூழ்ச்சித் திட்டம்: தி.க. தலைவர் கி.வீரமணி ஆவேசம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 4:57 PM IST

விஸ்வகர்மா யோஜனா திட்டம் மோடியின் சூழ்ச்சித் திட்டம் என கி.வீரமணி ஆவேசம்
விஸ்வகர்மா யோஜனா திட்டம் மோடியின் சூழ்ச்சித் திட்டம் என கி.வீரமணி ஆவேசம்

K.Veeramani: 2024-ல் நடக்கும் தேர்தல், பாஜகவை வழி அனுப்பும் தேர்தலாக இருக்கும் என்றும் விஸ்வகர்மா யோஜனா திட்டம் மோடியின் சூழ்ச்சித் திட்டம் எனவும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நெல்லை பொதுக்கூட்டத்தில் கூறியுள்ளார்.

விஸ்வகர்மா யோஜனா திட்டம் மோடியின் சூழ்ச்சித் திட்டம் என கி.வீரமணி ஆவேசம்

திருநெல்வேலி: திராவிடர் கழகம் சார்பில் மத்திய பாஜக அரசின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை எதிர்த்து, நெல்லை பாளையங்கோட்டையில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் இன்று (நவ.3) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு பேசுகையில், “தமிழக இளைஞர்கள் படிக்கக் கூடாது என்ற நோக்கில் குலத்தொழில் திட்டத்தை திணிக்கும் மத்திய அரசின் ‘விஸ்வகர்மா யோஜனா’ திட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறோம். மீண்டும் குலத்தொழிலை திணிப்பது சமூதாயத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும்.

9 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நாடு வளர்ச்சிக்கு பதிலாக, ஒவ்வொரு நாளும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். விஸ்வகர்மா யோஜனா திட்டம் சாதிய தொழிலை மீண்டும் உருவாக்கும் ஒரு திட்டமாகும். இது மோடியின் சூழ்ச்சித் திட்டம். நெல்லையில் சமீபத்தில், சாதி ரீதியாக இரண்டு பட்டியல் இன இளைஞர்கள் தாக்கப்பட்டு உள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதன் பின்னணியை நாம் பார்க்க வேண்டும். தமிழகத்தில் திராவிடமாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது. ஆட்சி மீது குறைசொல்ல முடியவில்லை. எனவே சாதிய, தீண்டாமை பிரச்சனைகளை திட்டமிட்டு சிலர் தூண்டி விடுகின்றனர்.

70 ஆண்டுகளுக்குமுன், திராவிட இயக்கம் போராடி குலக்கல்வி திட்டத்தை ஒழித்தது. அதனால் தான் இன்று நாம் கல்வி கற்க முடிகிறது, வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. தமிழகம் கல்வியில் அபார வளர்ச்சி அடைந்துள்ளது. இதனைப் பொறுத்து கொள்ள முடியாத மத்திய அரசு, விஸ்வகர்மா யோஜனா திட்டம், நீட்தேர்வு போன்றவைகளை கொண்டு வருகிறது.

எனவே, இதனை எதிர்த்து தமிழகத்தில் தொடர்ந்து ஜனநாயக முறைப்படி போராட்டமானது நடந்து வருகிறது. தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது. இதனை சீர்குலைக்கவே மத்திய அரசு இதுபோன்ற திட்டங்களை கொண்டு வருகிறது. இன்னும் 6 மாதம் மட்டுமே. அதன்பின்பு நாட்டில் எந்த மூலையிலும், பாஜக ஆட்சி இல்லாத நிலை ஏற்படும். 2024-ல் நடக்கும் தேர்தல், பாஜகவை வழியனுப்பும் தேர்தலாக இருக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய 80 இடங்களில் சோதனைக்கு காரணம் என்ன? முழுத் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.