ETV Bharat / state

தூத்துக்குடி காதல் திருமணம் தம்பதி படுகொலை வழக்கில் மேலும் 2 பேர் சரணடைந்தனர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 8:34 PM IST

Thoothukudi Newly married Couple Murder case update
தூத்துக்குடி காதல் திருமணம் தம்பதி படுகொலை வழக்கில் மேலும் 2 பேர் சரணடைந்தனர்

Thoothukudi Newly married Couple Murder: தூத்துக்குடியில் காதல் திருமணம் செய்த தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் இருவர் வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தனர்.

தூத்துக்குடி: முருகேசன் நகர் பகுதியை சேர்ந்த மாரிசெல்வம் என்ற இளைஞரும் திரு வி க நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்ற இளம்பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்‌. இந்நிலையில், மாரிசெல்வம் தனது பெற்றோர் வசந்தகுமார் உள்ளிட்டோருடன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கார்த்திகாவை திருமணம் செய்து வைக்கும்படி பெண் கேட்டுள்ளனர். இதற்கு கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் உள்ளிட்ட குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆறு மாதங்கள் கழித்து திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறி அனுப்பி உள்ளனர்.

ஆனால், கார்த்திகா-மாரிச்செல்வம் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த 30ஆம் தேதி மாரிசெல்வம் மற்றும் கார்த்திகா ஆகியோர் வீட்டை விட்டு வெளியேறி கோவில்பட்டியில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, புதுமண தம்பதிகளான மாரிசெல்வம் மற்றும் கார்த்திகா கடந்த ஒன்றாம் தேதி புது தம்பதியர்களாக திரு.வி.க நகரில் உள்ள கார்த்திகாவின் தாய்மாமா வீட்டிற்கு விருந்துக்கு சென்று திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், தங்கள் எதிர்ப்பை மீறி தங்களது மகள் கார்த்திகா தங்களை அவமானப்படுத்தி, திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரத்தில் இருந்த கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் தூண்டுதலின் பேரில், இவர்களை கொலை செய்வதற்காக ஒரு கும்பல் அலைந்து வந்துள்ளது. இதனிடையே, முருகேசன் நகர் வீட்டில் வைத்து மாரிசெல்வம் மற்றும் கார்த்திகா தனியாக இருக்கும்போது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் புதுமண தம்பதிகள் இருவரையும் வெட்டி சாய்த்து விட்டு தப்பியோடினர்.

இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையிலான காவல்துறையினர் வந்து விசாரணை நடத்தினர்‌. குற்றவாளிகளை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதில், கொலைக்கு தூண்டுதலாக இருந்த கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம், இசக்கி ராஜா, ராஜபாண்டி, மற்றும் 16 வயதான இளம் சிறார் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர். மேலும், இந்த கொலையில் தொடர்புடைய சில குற்றவாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தநிலையில், வழக்கில் தொடர்புடைய பரத் விக்னேஷ்குமார்(24) மற்றும் கருப்பசாமி(24) ஆகியோர் இன்று (நவ.4) நெல்லை மாவட்டம் வள்ளியூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதையடுத்து இருவரையும் வள்ளியூர் நீதிபதி ஆனந்த் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் காதல் தம்பதி வெட்டிக்கொலை.. பெண்ணின் தந்தை உட்பட 4 பேர் கைது..காதலிப்பது குற்றமா என உறவினர்கள் கதறல்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.