ETV Bharat / state

தூத்துக்குடியில் காதல் தம்பதி வெட்டிக்கொலை.. பெண்ணின் தந்தை உட்பட 4 பேர் கைது..காதலிப்பது குற்றமா என உறவினர்கள் கதறல்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 9:32 PM IST

Updated : Nov 3, 2023, 9:43 PM IST

Thoothukudi Newly married Couple Murder issue
Tuticorin Murder தூத்துக்குடி இளம் ஜோடி வெட்டி படுகொலை

Thoothukudi Newly married Couple Murder: தூத்துக்குடியில் புதிதாக திருமணம் செய்த காதல் தம்பதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இன்று அவர்கள் உடல் தகனம் செய்யப்பட்டது. அப்போது அவர்களது உறவினர்கள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது.

தூத்துக்குடி புதுமண தம்பதி வெட்டிக்கொலை.. காதலிப்பது குற்றமா என குடும்பத்தினர் கதறல்..

தூத்துக்குடி: கோவில்பட்டியை பூர்வீகமாகக் கொண்டவர் வசந்த குமார். இவர் தற்போது தூத்துக்குடி மாநகரில் உள்ள முருகேசன் நகர் 1-வது தெருவில் வசித்து வருகிறார். வசந்த குமார் லாரி லோடு மேன் வேலைப் பார்த்து வருகிறார். இவரது மனைவி சுமதி தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்துவருகிறார்.

இவர்களது ஒரே மகனான மாரிசெல்வம் (24), டிப்ளமோ படித்து விட்டு அருகே உள்ள ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அதேபோல், திரு.வி.க.நகர் பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் கார்த்திகா(20) பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

இந்த நிலையில், வசந்தகுமார் இதற்கு முன் திரு.வி.க.நகர் பகுதியில் வசித்து வந்தபோது, முத்துராமலிங்கம் மகள் கார்த்திகாவுக்கும், மாரிசெல்வதிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், இது பெற்றோருக்கு தெரியவந்து பெண் வீட்டார் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால், இரு வீட்டாருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 1 வருடத்திற்கு முன்பு தான், வசந்த குமார் குடும்பத்துடன் முருகேசன் நகர் பகுதிக்கு குடியேறியுள்ளார்.

கடந்த 30 ஆம் தேதி திடீரென மாரி செல்வம் - கார்த்திகா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சொந்த ஊரான கோவில்பட்டியில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அங்கு உறவினர்கள் வீட்டில் இருந்து வந்த அவர்கள் நேற்று (நவ.02) காலை 11 மணிக்கு தூத்துக்குடியில் உள்ள முருகேசன் நகரில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர்.

அப்போது, மாலை 3ஆம் மைல் பகுதியில் மாரிசெல்வத்தை மர்ம நபர்கள் மூன்று பேர் அரிவாளை கொண்டு வெட்ட முயற்சித்துள்ளனர். அப்போது, மாரிசெல்வம் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், மாலை 6:00 மணியளவில் வீட்டில் மாரிசெல்வம்-கார்த்திகா ஆகிய இருவரும் இருப்பதை அறிந்த மர்ம நபர்கள் 6 பேர் திடீரென வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். கணவன்-மனைவி இருவரையும் அந்த மர்ம கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வர அங்கிருந்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சண்முகம் மற்றும் நகர காவல் துறை கண்காணிப்பாளர் சத்தியராஜ், ஊரக காவல் டிஎஸ்பி சுரேஷ் ஆகியோர் இருவர் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் விசாரணை நடத்தினார். பின்னர், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர், சம்பவ இடத்திற்கு மோப்பநாய் ஜினோ வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து புறப்பட்டு அருகில் இருந்த ரயில்வே கேட் வரை சென்று திரும்பியது. ஆனால், யாரையும் பிடிக்கவில்லை.

இந்நிலையில், இன்று (நவ.03) காலையில் மாரிசெல்வம்-கார்த்திகா இருவரின் உடற்கூறாய்வு முடிந்து, பெண் வீட்டார் வசம் பெண்ணை ஒப்படைக்காமல் பெண்ணின் உடலைப் பார்க்க மட்டுமே அனுமதி அளித்து, மாப்பிள்ளை வீட்டாரிடமே உடல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது மாரிசெல்வத்தின் உறவினர்கள் கதறி அழுதனர். பின்னர், இருவர் உடலும் வாகனம் மூலம் சிதம்பர நகர் பேருந்து நிலையம் அருகே உள்ள மின்சார எரியூட்டு மையத்தில் தகனம் செய்யப்பட்டது.

புதுமண தம்பதி கொலையை நேரில் பார்த்த பக்கத்து வீட்டு பாட்டி ராஜபுஷ்பம் கூறுகையில், “நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஆறு பேர் கொண்ட கும்பல் வந்தனர். அவர்கள் வீட்டுக்குள் சென்றவுடன் 'டம் டம்' என சத்தம் கேட்டது. நான் வீட்டிற்குள் போய்விட்டு வெளியே வந்து பார்த்தபோது, வீட்டில் உள்ளே சென்று அந்த கும்பல் திரும்பி வந்ததை நேரில் பார்த்தேன். 6:15 மணிக்கு உள்ளே சென்று 6.30 மணிக்கு வெளியே வந்து விட்டனர்.

இறந்த மாரிசெல்வம் இருக்கும் இடம்கூட தெரியாது நல்ல பையன். சம்பவம் நடக்கும்போது, வீட்டில் ஒருவர் கூட இல்லை. புதுமண தம்பதிகள் மட்டுமே இருந்தார்கள். போலீஸ் வந்த பிறகுதான், வீட்டிற்குள் சென்றோம். அதுவரை யாரும் வீட்டுக்குள் செல்லவில்லை. இறந்த பையன் யாரிடமும் பேசமாட்டார், நல்ல பையன். அமைதியான பையன்” எனத் தெரிவித்தார்.

இந்த துயரமான சம்பவம் குறித்து உயிரிழந்த பையனின் தந்தை வசந்த குமார் கூறுகையில், “நாங்கள் வேலைக்குச் சென்று விட்டோம். வெளியே செல்வதற்காக மகனும், மருமகளும் மாலை கிளம்பிக் கொண்டு இருந்தனர். பெண்ணின் உறவினர்கள் தான் எல்லாத்திற்கும் காரணம். காதலிப்பதற்கும் அவர்கள் தான் ஐடியா கொடுத்தார்கள். திருமணம் முடித்தப் பிறகும், இப்படி செய்து விட்டார்கள். முதலில் போய் கேட்டபோது, அவர்கள் பெண் கொடுக்க முடியாது என்று கூறினர். அந்த பொண்ணு தான் விரும்பி வந்தார், இவன் போகவில்லை.

அந்தப் பெண்ணின் அப்பா அவரைத் தொடர்ந்து, அடித்து சித்திரவதை செய்து வந்ததால் வீட்டை விட்டு வெளியேறி வந்துள்ளார். திருமணம் முடிந்து இரண்டு நாள் கோவில்பட்டியில் இருந்து விட்டு வந்தார்கள். கோவில்பட்டி காவல் நிலையத்தில் இருந்து பெண் வீட்டாரிடம் பேசியிருக்கிறார்கள். அவர்கள் வரமாட்டேன் என தலைமுழுகி விட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஒரே சமூகமாக இருந்தும் அவர்களுக்கும் நமக்கும் செட்டாகவில்லை. சமூகத்தில் வேறு வேறு கிளை என்பதால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது வரை வேறு எந்த காரணம், இல்லை இதுதான் காரணம். அந்த பொண்ணு தான், அப்பா அடி தாங்க முடியவில்லை; கூட்டிட்டு சென்றுவிடு என என் மகனிடம் கேட்டுள்ளார். இப்ப என் பையன் வாழ்க்கையே முடிந்துவிட்டது.

இரண்டு வருடமாக காதலிக்கிறார். அப்பவே கேட்கும் பொழுது அவங்க அப்பா அப்பவே வெட்டுவேன், குத்துவேன் என மிரட்டினார். அதனால், வேண்டாம் என வந்துவிட்டோம். தொடர்ந்து அந்தப் பெண் தான், லவ் பண்ணு என தொந்தரவு செய்து வந்தது. தேவர் ஜெயந்தி அன்று தந்தை அதிக அளவு அடித்துள்ளார். அதன் காரணமாகத்தான், வீட்டை விட்டு அந்த பெண் வெளியேறி உள்ளது” எனத் தெரிவித்தார்.

பையனின் உறவினர் ஒருவர் கூறுகையில், “இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான். தேவர் ஜெயந்தி அன்று திருமணம் நடந்தது. பிரச்னை இருந்தால் கூறென என்று அந்த பெண்ணை அழைத்து கேட்டேன். மூன்று நாட்களாக கேட்டேன். காலில் விழுந்தாவது கூட உங்க அப்பாவிடம் அனுமதி கேட்கிறேன் என்றேன். வாலிப வயதில் காதலிப்பது குற்றமா?” எனக் கதறி கண்ணீர் விட்டார்.

மேலும், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கூறுகையில், “இக்கொலை சம்பந்தமாக 3 பேரிடம் விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. விசாரணை முடிவில் குற்றவாளி யார்? என்பது தெரியும். மேலும், 3 தனிப்படைகள் அமைத்து தேடிவருகிறோம் என்றார். மேலும், போலீசார் பெண்ணின் தந்தையான முத்துராமலிங்கத்திடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணின் தந்தை உட்பட 4 பேர் கைது: இதைத்தொடர்ந்து காதல் திருமணம் செய்த தம்பதியினர் கொலை வழக்கில், திரு.வி.க.நகரைச் சேர்ந்த கொலையான கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம்(47), தூத்துக்குடி கே.வி.கே.நகரைச் சேர்ந்த இசக்கிமுத்து மகன் இசக்கிராஜா(23), தூத்துக்குடி சங்கர் காலனியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி(27) மற்றும் ஒரு சிறார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

Last Updated :Nov 3, 2023, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.